100 ஆண்டுகளுக்கு முன்தான் சாதி உருவானதா? சனாதன வழக்கின் தீர்ப்பு திருத்தப்பட்டது! முழு விவரம்...

இன்றைய சமூகத்தில் சாதி ரீதியிலான சமத்துவமின்மை உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் இன்று நாம் அறிந்து கொள்ளும் சாதிகள் வகைப்பாடு என்பது நவீன காலத்தில் ஏற்பட்டதுதான்.
நீதிபதி அனிதா சுமந்த்
நீதிபதி அனிதா சுமந்த் ட்விட்டர்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் எம்பி ஆ.ராசா ஆகியோர் மீதான சனாதனம் தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது சர்ச்சையாகி இருந்தது. இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் தேதி அளிக்கப்பட்டது. அதில், “அமைச்சர்களுடைய கருத்துகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, பிழையான, அரசியல் சட்டத்திற்கு முரணான தவறான தகவல்களை கொண்டதாக இருக்கின்றன.

ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சம சுதந்திரம் வழங்க வலியுறுத்தும் நிலையில், வெறுப்பு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது ஆபத்தானது. உதயநிதி, ஆ.ராசா ஆகியோரின் கருத்துகள் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் தங்கள் சொந்த மக்கள் பின்பற்றும் குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழிப்பதாக பேச முடியாது. கருத்து சுதந்திரமானது அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பேசவோ, குறிப்பிட்ட நம்பிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவோ, அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் என கருத முடியாது.

குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழித்துவிடுவதாக இவர்கள் பேசியது மதச்சார்பற்ற தன்மையின் மதிப்புகளின் கீழ் இவர்கள் எடுத்த உறுதிமொழியை மீறும் செயல். சனாதன தர்மம் என்பது மக்களின் உயர்வுக்கான ஒரு வழிகாட்டு விதி. சனாதன நம்பிக்கை என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காகவே தவிர, பிளவுபடுத்துவதற்கு அல்ல. அந்த ஒருங்கிணைப்பு பணிகளை தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நீதிபதி அனிதா சுமந்த்
தலைப்புச் செய்திகள் | ‘தூத்துக்குடியில் பிரதமர்’ முதல் ‘சின்னத்திரை நடிகை மதுமிதா மீது வழக்கு' வரை!

தற்போதைய சமுதாயத்தில் நிலவும் சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதற்காக ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தை குற்றம் சொல்ல முடியாது. வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கவில்லை. தொழிலின் அடிப்படையில்தான் சமூகத்தை பிரித்திருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் அது பொருந்துமா பொருந்தாதா என்பது விவாதத்திற்குரியது” எனத் தெரிவித்தார்.

சனாதன தர்மத்தை தவறாக வர்ணாசிரம தர்மத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி அனிதா சுமந்த், ரிக் வேதம் சொல்லக்கூடிய பழமையான வர்ணாசிரம தர்மத்தின் மீது பழிபோட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், “நாட்டில் சாதிய நடைமுறை என்பது நூற்றாண்டைகூட தாண்டாத நிலையில் ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தை குறைகூற முடியாது. மாநிலத்தில் இருக்கும் சாதி ரீதியிலான பிரிவினையை ஒழிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக பேசுவதுபோல் இவர்களின் பேச்சுக்கள் உள்ளது.

விமர்சனங்கள் வளர்ச்சிக்கு அவசியமானதுதான் என்றாலும், அவை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். கடந்த கால நியாயமற்ற அநீதிகளை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இன்று நடைமுறையில் உள்ள சாதிய சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும். சாதிய அடிப்படையில் மக்கள் கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணம் பல்வேறு சாதிய பிரிவினருக்கு அரசு கொடுக்கக்கூடிய சலுகைகள்தான். யார் எந்த நம்பிக்கையை பின்பற்றினாலும், தர்மத்தை யார் காக்கிறார்களோ, அவர்களை தர்மம் காக்கும்” என தெரிவித்திருந்தார். இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து இது பேசுபொருளானது. அதனையடுத்து, தீர்ப்பின் சில வரிகளை மாற்றி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதி அனிதா சுமந்த்
’ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’..தைவான் குறித்து சீன அதிபர் எச்சரிக்கை

இவர் முதலில் வெளியிட்ட தீர்ப்பின் பக்கத்தில், "இன்றைய சமூகத்தில் சாதி ரீதியான சமத்துவமின்மை நிலவுவதும், அதை தவிர்க்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்றாலும், மாநிலத்தில் சாதிய நடைமுறைகள் நூறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்தான் உருவாகியுள்ளன. தமிழகத்தில் 370 சாதிகள் உள்ளன. இந்த சாதிகளின் நிர்பந்தத்துக்கு அரசு ஆட்பட்டுள்ளது” என இருந்தது.

இந்த தீர்ப்பு சர்ச்சையான நிலையில், 138-வது பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டுட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் "இன்றைய சமூகத்தில் சாதி ரீதியிலான சமத்துவமின்மை உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் இன்று நாம் அறிந்து கொள்ளும் சாதிகள் வகைப்பாடு என்பது நவீன காலத்தில் ஏற்பட்டதுதான். தமிழகத்தில் 184 சாதிகள் உள்ளன. இந்த சாதிகளின் நிர்பந்தங்களுக்கு அரசு ஆட்படுகிறது” என திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு புத்தகத்தின் பெயரும் எடுக்கப்பட்டு பொதுவான அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com