“சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை”- பொன் மாணிக்கவேல் அறிக்கை

“சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை”- பொன் மாணிக்கவேல் அறிக்கை
“சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை”- பொன் மாணிக்கவேல் அறிக்கை

காணாமல்போன பாரம்பரிய சிலைகளை மீட்பதில், அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும், சிலை மீட்பு விசாரணைகளில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் பொன் மாணிக்கவேல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டில் சிலை கடத்தல் வழக்குகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை  தாக்கல் செய்தார். அதில், “என்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தபோதே அந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக்கடத்தல் சிறப்பு பிரிவில் இருந்து என்னை விடுவிக்கக்கோரியும் 66 காவல்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பின்னர்  202 காவல்துறையினர் என் தலைமையில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தனர். இதில் 51 காவல் அதிகாரிகளும், 15 காவலர்களும் தங்களை விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,  புதிதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு குழுவிற்கு 85 அதிகாரிகள், 108 காவலர்கள் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டனர். 

அதன் பின்னர் சிலைக்கடத்தல் தொடர்பாக  விசாரணைகளில் ஏடிஜிபியின் தலையீடு, போதிய ஒத்துழைப்பு வழங்காததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இதன்பிறகு என் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவானது, 116 வழக்குகளில் தகவல்களை திரட்டியது. அவற்றில் 59 வழக்குகளில் 110 சிலைகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.  சிலைக்கடத்தல் தொடர்பாக திரட்டிய விசாரணை தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகளை தொலைத்த 31 வழக்குகளில், கடமை தவறிய காவல்துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி, தனக்கு உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தேவையில்லை. டிஜிபியின் உத்தரவை மட்டுமேதான் பின்பற்றி சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிப்பதாக எங்களுடைய விசாரணையில் குறுக்கிட்டார். எங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைத்த இந்து அறநிலைய துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

 இத்தகைய பிரச்னைகளுக்கு மத்தியில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக என்னை நியமித்த ஒராண்டில் சிலைக்கடத்தல் தொடர்பாக 3 வழக்குகளில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் திருடப்பட்ட 12 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. சாட்சிகள் உதவியால் 4 வழக்குகளில் சிலைத் திருட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 56 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிற்கு சொந்தமான  6 சிலைகள் சிங்கப்பூரில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து 9 சிலைகளும் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. பாரம்பரிய சிலைகள் மீட்பு, அதை சோதனையிடுவதில் தமிழக அரசு போதிய விருப்பம் காட்டுவதில்லை. எங்களின் விசாரணைக்கான வாகன செலவு, வெளிநாடு சென்று விசாரிப்பதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்க கோரி கடிதம் அளித்தும் இதுவரை அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com