சென்னை | அரை கிலோ தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை!
சென்னை சவுகார்பேட்டை, மிண்ட் தெருவில் "நியூ மந்திர் ஜெயின் கோவில்" உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று நண்பகல் பூஜைக்காக ஜெயின் கோயிலுக்கு சென்று கதவை திறக்க முற்பட்டபோது கோவிலின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோவில் கருவறை கதவின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, கருவறைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ஐந்து ஜெயின் சிலைகளில் இருந்த நகைகள் திருடு போயிருந்தன.
குறிப்பாக ஐந்து சிலைகளின் உடம்பில் அணியப்பட்டிருந்த சுமார் அரை கிலோ மதிப்பிலான தங்க ஆபரணங்கள் மற்றும் சிலைகளின் தலையில் வைக்கப்பட்டிருந்த தலா இரண்டு கிலோ எடை கொண்ட 5 வெள்ளி கிரீடங்கள் என மொத்தம் அரை கிலோ தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகியான சுரேஷ்குமார் என்பவருக்கு திலீப் தகவல் அளித்துள்ளார். உடனடியாக கோவிலின் நிர்வாக உறுப்பினர்கள் கோவிலுக்கு வந்து சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது நேற்று இரவு (13 ம் தேதி இரவு) கோவில் சுவர் ஏறி குதித்து உள்ளே வரும் மர்ம நபர்கள் சிலர் முன்புற கதவின் பூட்டை உடைத்து, அதன் பின் கோவிலுக்குள் வந்து கருவறையின் பூட்டை உடைத்து கோவில் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க, வெள்ளி நகைகளை திருடிச் செல்வது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகியான சுரேஷ்குமார் என்பவர் இன்று மாலை யானைக் கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய யானைக் கவுனி போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணையில், கொள்ளையர்கள் 12 அடி உயரத்தில் இருந்து சுவருக்குச் சுவர் தாவி கோவில் உள்ளே குதித்தும், நகையை திருடிவிட்டு மூட்டை கட்டி தப்பியோடியதும் தெரியவந்தது. மேலும், இதன் சிசிடிவிக் காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, துணி ஒன்றை கொள்ளை அடிப்பதற்கு முன்பாக சுவற்றில் தொங்க விட்டு கொள்ளை அடித்து முடித்தவுடன் துணி மூலமாக அந்த மூட்டையை தூக்கிய சிசிடிவி காட்சிகளளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தை 1 மணி நேரத்தில் கொள்ளையர்கள் அரங்கேற்றி அங்கிருந்து தப்பிச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கோவிலில் பணிபுரிந்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து யானை கவுனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.