”நான் பாமகவில் இருந்து விலகத் தயார்” - ஜி.கே மணி உறுதி.!
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப்பூசல் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே நீடித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி இரு அணிகளாகவே செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயேவும் மோதல் போக்குகள் தினம் தினம் புதுப்புது உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அண்புமனி தரப்பிலிருந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பின்னாலிருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. அதே சமயத்தில், அன்புமணி ராமதாஸ் பாமகவின் கௌரவத் தலைவராக இருக்கு ஜி.கே மணியை ’துரோகி’ என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே மணி, “ அன்புமணி என்னை துரோகி எனக் கூறியது வேதனையாக இருக்கிறது. அன்புமணியை மத்தியமைச்சராக்க நானே பரிந்துரை செய்தேன். மேலும், ராமதாஸ் என்னை மாநிலங்களைவை உறுப்பினர் பதவிக்கு போக வேண்டும் எனக் கூறிய போது கூட அதை, அன்புமணிக்கு நான் தான் பரிந்துரை செய்தேன்.
இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப்பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்று கூறுவது வேதனையாக இருக்கிறது. அவர் தான் ராமதாஸை கண்கலங்க வைத்து வருகிறார். ராமதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அன்புமணியும், ராமதாசும் இணைவதாக இருந்தால் நான் கட்சியை விட்டு விலகத் தயார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

