
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சட்டவிரோதமாக உரிமம் வழங்கி குவாரிகளை இயக்கியதாகவும், அதன் மூலம் 2,64,644 லாரிகளில் செம்மண் எடுத்து விற்பனை செய்து அரசுக்கு 28 கோடி ரூபாயை வருவாய் இழப்பு செய்ததாகவும் கூறப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் காலை 7 மணி முதல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை, 5 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சரின் சொகுசு வாகனங்களையும் ஆய்வு செய்தது. சொகுசு வாகனத்தை ஆய்வு செய்தபோது அங்கிருந்த டைரி ஒன்றை கைப்பற்றி 10 நிமிடங்களுக்கு மேலாக அவற்றை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து காரில் இருந்த இரண்டு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி அவற்றையும் ஆய்வு செய்தது.
அமைச்சர் பொன்முடியின் கணினி உள்ளிட்ட மென்பொருட்களையும் ஆய்வு செய்ததில் பல செயலிகள் திறக்க முடியாமல் ரகசிய எண் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதன் காரணமாக டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் பொருளாதார தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சோதனை நடக்கும் இடத்திற்கு வந்த பொருளாதார தடயவியல் நிபுணர்கள் மென்பொருட்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் சொத்து வாங்குவது விற்பனை செய்வது, பணப்பரிமாற்றம், வங்கி கணக்கு விவரங்கள், உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறியுள்ள நிலையில் அது தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்களை சரி பார்க்கக் கூடிய வகையில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் இந்தோனேசியா, அரபு நாடுகளில் பல லட்சம் ரூபாயில் பங்குகளை முதலீடு செய்துள்ளதாக பதியப்பட்டுள்ள அந்நிய செலவாணி வழக்கில் அமைச்சரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் அலுவலகங்கள், நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணினியில் இருந்த ஆவணங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் தடயவியல் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், நீக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் தடயவியல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள். என்ன மாதிரியான பணப்பரிமாற்றம் செய்துள்ளார்கள், வங்கிக் கணக்குகள், செய்யப்பட்ட முதலீடுகள் போன்றவை ஆவணங்கள் சரிபார்ப்பில் மேற்கொள்ளப்படும்.