“ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு திமுக” – அறிவுத் திருவிழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் திமுக இளைஞர் அணி சார்பாக ‘அறிவுத் திருவிழா’ சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு’ நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் இருவண்ணக் கொடிக்கு வயது 75 என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது. மேலும் திராவிட ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்க நிகழ்வும் நடந்தது. திராவிட இயக்கம் சார்ந்த 50 க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்ட முற்போக்கு புத்தக் கண்காட்சியையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ,செல்வபெருந்தகை, பெ.சண்முகம், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசும்போது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு பயணத்தை நினைவு கூறக்கூடிய இந்த விழாவிற்கு ‘அறிவு திருவிழா’ என உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
கழகத்தை தொடங்கியது அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் வரை கட்டிக் காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். கழகத்தின் முதல் தலைமையகம் பேரறிஞர் அண்ணா அறிவகம். அதேபோல் கலைஞர் கட்டிய தலைமை கழகத்தின் பெயர் அறிவாலயம். இப்படி அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதை தலையாய கடமையாக செயல்படும் கட்சியின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவு திருவிழா என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்.
முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967 ஆம் ஆண்டு முதல் மாநில கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சியான திமுகவின் பல ஆய்வாளர்களும் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏதோ கட்சியை தொடங்கினோம்... அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அறிவித்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. உலகத்தின் தலைவர்கள் முதல் கடை கோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுக உயிரைக் கொடுத்து ஒவ்வொருத்தரும் உழைத்தார்கள்.
எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுப்புகள், நாடகங்கள் எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறை வாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள்.. திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பல்ல. சமூகத்தில் சரி பாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாத காலகட்டத்தில் குக்கிராமத்தில் முடி திருத்தும் மையம் கூட மக்களின் சிந்தனைகளை திருத்தும் மையமாக செயல்பட்டது.
வரலாறு பற்றி தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போல் வெற்றி பெற திமுக போல் உழைப்பும் அறிவும் தேவை. ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு திமுக தான்.
இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. இந்த வரலாற்றை நம் கொள்கையை உதயநிதி நம் இனிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் காரணத்தால்தான் இளைஞர் அணி செயலாளர் ஆக பொறுப்பேற்றுதில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்திற்குள் கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு பாசறை கூட்டங்களை நடத்தியுள்ளார். முரசொலியின் கடைசி பக்கத்தை பாசறை பக்கமாக மாற்றினார்.
கொள்கைகளைப் பரப்ப முத்தமிழ் படைப்பகத்தை தொடங்கினார். தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கிறார். உங்களைப் போல இளம் பேச்சாளர்களை உருவாக்கி இருக்கிறார். இந்த அறிவு திருவிழா மூலம் இளம் எழுத்தாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா செய்த பணி... நான் விரும்பும் பணி. இதை உதயநிதி செய்யும் காரணத்தால் தந்தை என்பதைவிட இந்த இயக்கத்தின் முதன்மை தொண்டன் என்ற வகையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.

