திண்டுக்கல் | அரசுப் பள்ளி மாணவர்களை 2 கிமீ தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரச் சொன்ன அவலம்!
செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளியில் உணவு சமைக்க தண்ணீர் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வருமாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதைடுத்து சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குடங்களில் தண்ணீரை எடுத்துக் பள்ளிக்கு இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதங்களில் வைரலாகி வரும் நிலையில், சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்த மாணவர்; ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு கல்வி பயில வரும் மாணவர்களை தண்ணீர் எடுத்துவரச் சொன்ன ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தண்ணீர் எடுக்கச் செல்லும் மாணவர்களும் அசம்பாவிதம் நேர்ந்தால் உயிருக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது...
'பள்ளியில் மோட்டார் இயங்காததால் பள்ளி மாணவர்கள் குடிப்பதற்காக தண்ணீர் எடுத்து வந்துள்ளனர் என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார், மேலும், முழு விளக்கத்தையும் தாக்கல் செய்ய தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.