விஜய் முதலமைச்சர் ஆவதை நான் தடுத்தேனா? ரஜினி பரபரப்பு விளக்கம்!
விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக, அதிமுகவை ஓரங்கட்ட, ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குழப்பம், ரஜினி ஸ்டாலினை சந்தித்தது, அவர் விஜய் முதலமைச்சர் ஆவதை தடுத்தாரா என்ற குற்றச்சாட்டு, ஏர்போர்ட்டில் வாழ்த்து விவகாரம், விஜய்மீது பொறாமை குற்றச்சாட்டை மறுத்து, அவரின் சாதனையை பாராட்டிய ரஜினியின் விளக்கம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜய் அரசியலில் காலடி வைப்பதற்கு முன்பாகவே ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே காக்கா-கழுகு கதை சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா-கழுகு கதையும், தொடர்ந்து லியோ பட வெற்றி விழாவில் விஜய் சொன்ன யானை, முயல் கதை அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்ததுமாக சர்ச்சை வெடித்தது. இருவரின் ரசிகர்களும் சமூகவலைதளங்கலில் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் விமர்சித்துகொள்வதாக இருந்துவருகின்றனர்.
இந்தசூழலில் தான் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பொதுமேடையில் சொன்ன ஒரு கருத்து சர்ச்சையாக வெடித்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து சொன்ன ரஜினிகாந்த் ‘காலம் காத்திருந்து பதில் சொல்லும்’ என தன்னுடைய பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகும் ரஜினி-விஜய் ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் மோதல் இருந்துவந்தது.
இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிபெரும்கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான தவெக, ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஓரங்கட்டியது. ஆனாலும் தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாததால் விஜய் ஆட்சியமைப்பதில் நீண்ட இழுபறி நீடித்தது. ஒரு கட்டத்தில் திமுக-அதிமுக இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதற்கான வேலை ரஜினிமூலமாக தான் நடந்துவருகிறது எனவும் சர்ச்சை கிளம்பியது.
இந்தசூழலில் தான் ஸ்டாலினை சந்தித்தது ஏன், நான் விஜய் முதலமைச்சர் ஆவதை தடுத்தேனா என்பது குறித்து ரஜினி விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் முதலமைச்சர் ஆவதை தடுத்தேனா?
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், “என் மீது சமீபமாக 3 விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முதல்ல நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தது. ஸ்டாலின் சார் என்னுடைய 38-40 வருட நண்பர். எங்களுடைய நட்பு கொள்கைகள், அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சாதாரணம் தான், இருந்தாலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் சார் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் தான் நண்பர் என்கிற அடிப்படையில் அவரை போர் சந்தித்தேன்.
ஆனால் அதற்கு வந்து விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது, பவருக்கு வரக்கூடாது, அதைத் தடுக்க தான் ரஜினிகாந்த் அங்க போயிருக்காரு, வேற எதோ 2 கட்சிகளை சேர்க்கணும்னு சொல்லி பேசுறாங்கனு விமர்சனங்கள் வெளியில் வந்தது. அந்த சூழ்நிலையில் அப்படியெல்லாம் பேசும் தரங்கெட்ட ஆள் ரஜினிகாந்த் இல்லை, அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இரண்டாவது விஜய்க்கு நான் ஏர்போர்ட்டில் வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சனம் வந்தது. விஜய் அவர்கள் வெற்றிபெற்றபிறகு எக்ஸ் தளத்தில் நான் வாழ்த்து தெரிவித்தேன். ஏர்போட்டில் கேள்விகேட்டவர் மீடியா ஆள்போல எனக்கு தெரியவில்லை, ஏர்போட்டில் கேட்டபோது கூட வெளியில் செய்தியாளர்கள் யாரும் இல்லை என்றுதான் கூறினார்கள். ஒரு சின்ன ஃபோனை வச்சிகிட்டு, விஜய் அவர்கள் சிஎம் ஆகியிருக்காருனு கேட்டதும் யாரு இவர் செய்தியாளர் போல இல்லையே என்றுதான் நான் சிரித்துவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் அதற்கு விஜய்க்கு ரஜினி வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது.
3வது விஜய் மீது எனக்கு பொறாமை என்ற விமர்சனம். அரசியலிலேயே நான் இல்லாதபோது அவர்மேல் எனக்கு என்ன பொறாமை வரப்போகிறது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆகியிருந்தால்கூட எனக்கு பொறாமை வந்திருக்குமோ.. என்னவோ? அப்போதுகூட வந்திருக்காது.
எனக்கும் விஜய்க்கும் தலைமுறை இடைவெளி இருக்கிறது. கிட்டத்தட்ட 25 வருடம் வித்தியாசம். விஜயை சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவரைப் பார்த்து எனக்கு என்ன பொறாமை? இவ்வளவு சின்ன வயதில் எம்ஜிஆர், என்டிஆர் பண்ண சாதனைகளை விட அதிகமான சாதனையை படைத்துள்ளார்.
மத்தியில் பாஜக, மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் சினிமாத்துறையில் இருந்து வந்து.. அதில் எனக்கு பொறாமை இல்லை. ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். சூப்பர்... மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய் மக்களுக்கு நல்லது செய்யணும். செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள்” என் விளக்கம் கொடுத்துள்ளார்.

