கிரிவலப்பாதை | இடுக்கு பிள்ளையார் கோவில் இடுக்கில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில், ஆந்திராவைச் சேர்ந்த 36 வயது ஆன்மீக பக்தர் மணிக்குமார், இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தருவது வழக்கம்.
அண்ணாமலையாரை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள், ஆசிரமங்கள், சிறப்பு வாய்ந்த கோயில்கள் என அனைத்தையும் சென்று வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில், நேற்று இரவு 11 மணிக்கு கிரிவலம் மேற்கொண்டு வந்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆன்மீக பக்தர் மணிக்குமார்(36) இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்ய சென்ற பொழுது, உடல் பருமன் காரணமாக கோவில் இடுக்கிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, வெளியே வர முடியாமல் இருந்த அவரை பொதுமக்கள் உதவியுடன் உடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது, திருவண்ணாமலை கிரிவலம் வந்து இடுக்குப் பிள்ளையாரை தரிசனம் செய்ய வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்களுக்கு இடுக்கு பிள்ளையார் கோவில் மோட்ச துவாரம் என்று ஆந்திர மாநில ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் கூறியதன் அடிப்படையில், தினமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு நின்று இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலில் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

