"எனக்கு கொலை மிரட்டல் வந்தது போல், யாருக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எஸ்பி.வேலுமணி
செய்தியாளர்: பிரவீண்
அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்:
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்பிவேலுமணி, "கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.
கைத்தறி, விசைத்தறி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:
தோடர்ந்து பேசிய அவர்... திமுக தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் தரவில்லை. அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள். கைத்தறி, விசைத்தறி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால்தான் மாற்றம் கிடைக்கும் என பொதுமக்கள் பலரும் கூறுவதாக தெரிவித்த அவர், திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது. முதியவர்களை கொலை செய்து நகைகள் எடுத்துச் செல்லப்படுகிறது,
தமிழகத்தில் மெட்ரோ வர அம்மா தான் காரணம்:
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த பொழுதெல்லாம் கோவையில் ஆர்எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்றது, ஆனால், தற்போது சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எம்ஜிஆர், அம்மா இருக்கும் பொழுது மத்திய அரசிடம் இருந்து அதிக நிதிகள் வாங்கப்பட்டு வந்தது. மெட்ரோ வர அம்மா தான் காரணம். நான் அமைச்சராக இருக்கும் பொழுது மற்ற மாநிலங்களில் கட்டபடாத வீடுகளை கூட இங்கு கட்டினோம்.
யாருக்கு மிரட்டல் வந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:
பருவமழை துவங்கி விட்டது, சாலைகள் குண்டும் குழியுமாய் உள்ளது இதனால் மக்கள் அவதிப்பட போகிறார்கள். எந்த நீர் நிலைகளும் தூர்வாரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்யவில்லை. எனக்கு வந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது, இதனை செய்திகளில் விளம்பரப்படுத்தியது வருத்தம் அளிக்கிறது யாருக்கு இது போன்ற மிரட்டல் வந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் எந்த வேலைகளும் செய்யப்படுவதில்லை, ஆனால் வரிகள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர் இது சம்பந்தமாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.