'எங்களுக்கு அச்சமாக உள்ளது..' தர்கா, பள்ளிவாசல்களை பாதுகாக்க வேண்டும்.. முதல்வருக்கு கோரிக்கை!
முத்துப்பேட்டையில் தர்காக்களின் முன்னேற்ற பேரவை தலைவர் பாக்கர் அலிசாகிப், மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பாதிக்கிறது என்று கூறினார். தமிழக முதல்வர் தர்கா, பள்ளிவாசல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழக தர்காக்களின் முன்னேற்ற பேரவை தலைவர் பாக்கர் அலிசாகிப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை திருப்பரங்குன்றத்தில் தர்கா சம்பந்தமாக உள்ள வழக்கில் தீபம் ஏற்றுவது சரி என்று ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு எங்களுக்கு அச்சமாகவும், அதேநேரத்தில் அதிர்ச்சியாகவும் உள்ளது. இஸ்லாமியர்களின் நம்பிக்கையில் நீதிமன்றம் மண்ணள்ளி போட்டுவிட்டது என்று தான் கருதுகிறோம்.
எங்களுக்கு எதிராக எந்த பெரும்பான்மை மக்களும் நீதிமன்றத்திற்கு சென்று நாங்கள் தீபம் ஏற்ற வேண்டும் என கூறவில்லை. யாரோ ஒருவர் சொல்லியதை வைத்துக் கொண்டு நீதித்துறை அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறுவது எங்களுக்கு மிகப்பெரிய அச்சமாக உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பெரிய அச்சமாக உள்ளது.
இந்த ஒரு தர்காவை காரணம் காட்டி இது செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் தர்காக்கள் என எங்களுக்கான அனைத்து இடங்களிலும் இந்த நிலை ஏற்படும் என நாங்கள் அச்சப்படுகிறோம். ஆகவே தமிழக முதல்வர் இந்த தர்காவையும், அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லை என்றால் இந்த நேரத்தில் அங்கு என்ன நடக்கும் என்று எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம், ஆனால் நீதித்துறை மண்ணள்ளி போட்டு விட்டது. ஆகவே தமிழக அரசும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த தர்கா மற்றும் தமிழகத்தில் உள்ள தர்கா பள்ளிவாசல்கள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார்

