”வம்புக்கு இழுக்கக்கூடாது.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”.. திமுக MLA-க்கு எம்பி ஜோதிமணி பதிலடி!
திமுக எம்எல்ஏ கோ.தளபதியின் விமர்சனத்திற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக எம்எல்ஏக்கள் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை அவமதிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவுசெய்வார் என்றும், திமுக எம்எல்ஏக்கள் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து ’ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என தவெக தலைவர் விஜய் பற்றவைத்த தீ, இன்னும் திமுக-காங்கிரஸ் இடையே புகைச்சலை அணையாமல் வைத்துவருகிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என சொன்னபோதே காங்கிரஸ் கட்சியினரும் திமுகவிடம் எங்களுக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இப்பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலை ஏற்பட்டாலும், காங்கிரஸ் மேலிடம் அமைதியாகவே இருந்தது. இந்தசூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார்.
இந்தசூழலில் மீண்டும் இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினரை திமுக எம்எல்ஏ தளபதி சீண்டியுள்ளார்.
ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்..
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, ”மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள்.
இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்..
இந்தசூழலில் திமுக எம்எல்ஏ தளபதிக்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?
காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை
எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம்.
கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது” என பதிவிட்டுள்ளார்.

