முற்றும் திமுக-காங்கிரஸ் மோதல்| ’ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்..’ திமுக MLA vs காங்கிரஸ் MP மோதல்!
திமுக எம்எல்ஏ கோ.தளபதி மற்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இடையே ஏற்பட்ட மோதல், திமுக-காங்கிரஸ் இடையேயான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. திமுக எம்எல்ஏவின் கடுமையான விமர்சனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து ’ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என தவெக தலைவர் விஜய் பற்றவைத்த தீ, இன்னும் திமுக-காங்கிரஸ் இடையே புகைச்சலை அணையாமல் வைத்துவருகிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என சொன்னபோதே காங்கிரஸ் கட்சியினரும் திமுகவிடம் எங்களுக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இப்பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலை ஏற்பட்டாலும், காங்கிரஸ் மேலிடம் அமைதியாகவே இருந்தது. இந்தசூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார்.
இந்தசூழலில் மீண்டும் இவ்விவகாரம் குறித்து திமுக எம்எல்ஏ தளபதி சொன்ன கருத்து, இரண்டு கட்சியினருக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சித்த திமுக எம்எல்ஏ.. பதில் கொடுத்த காங்கிரஸ் எம்பி!
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, ”மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள்.
இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் திமுக எம்எல்ஏ தளபதி கருத்துக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ”இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

