பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய விவகாரம்: “சிறுபிள்ளைத்தனமானது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று நடந்தது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியாதைக்கும் பின் பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்ற சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், “இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்பது அளிக்கப்பட்டது.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர், அவை முன்னவர், அமைச்சர்கள் என பலரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆளுநரை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தன் பதிவில் முதல்வர், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்றுள்ளார்.