எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்..’ சிக்கிய இந்தியர்? - சின்மயி போட்ட பதிவு!
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணங்களில் தீபக் சோப்ரா உள்ளிட்ட பல இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சின்மயி, இந்த ஆவணங்களை பகிர்ந்து, 'கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்' என்ற தீபக் சோப்ராவின் மின்னஞ்சலை சுட்டிக்காட்டி, மேலும் பல சக்திவாய்ந்த இந்தியர்களின் பெயர்கள் வெளிவரலாம் எனக் கூறியுள்ளார்.
ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகளில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் எப்ஸ்டீன் ஃபைல்ஸில் இடம்பெற்றுள்ள இந்தியர்களாக அனில் அம்பானி, ஆரோக்கிய குரு தீபக் சோப்ரா, அரசியல்வாதி ஹர்தீப் சிங் பூரி, திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயர், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளது.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன..?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு செல்வாக்குமிக்க அமெரிக்க நிதி ஆலோசகர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, 'எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த ஆவணங்களில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே அவர் குற்றம் செய்தவர் என்று அர்த்தமல்ல என்று வல்லுநர்களும் புலனாய்வாளர்களும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆவணங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி இந்திய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்தசூழலில் எப்ஸ்டீன் ஃபைல்ஸில் இந்தியாவின் தீபக் சோப்ராவின் பெயரும் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட பதிவுக்கு தான் பாடகி சின்மயி ரியாக்ட் செய்துள்ளார்.
எப்ஸ்டீன் ஃபைல்ஸில் தீபக் சோப்ரா.. சின்மயி பதிவு!
எப்ஸ்டீன் கோப்புகளில், ஆரோக்கிய குருவான தீபக் சோப்ரா இடம்பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு எப்ஸ்டீன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும், தீபக் சோப்ரா பல சந்தர்ப்பங்களில் எப்ஸ்டீனை சந்தித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றிய செய்திகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறைந்தபட்சம் 2018 வரை அவர்கள் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. ஒரு மின்னஞ்சலில், "அவள் உங்களுக்கு எதிரான சிவில் வழக்கையும் கைவிட்டாளா? (Did she also drop the civil case against you?)" என்று தீபக்கும். எப்ஸ்டீன், "யூப் (YuP)" என்றும் பதிலளித்தார், தீபக் சோப்ரா அதற்கு "நல்லது (Good)" என்று பதிலளித்துள்ளார்.
இந்தசூழலில் தீபக் சோப்ரா குறித்து எப்ஸ்டீன் ஃபைல்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் பதிவில், தீபக் சோப்ரா 2017-ல் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு இரண்டு வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் "கடவுள் என்பது ஒரு கற்பனை. அழகான பெண்கள் நிஜமானவர்கள்" என்று அனுப்பினார்.
ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பிராண்டை உருவாக்கிய அந்த மனிதர், தண்டனை பெற்ற ஒரு பாலியல் குற்றவாளியிடம் இப்படித்தான் பேசியுள்ளார்” என பதிவிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பதிவிட்டிருக்கும் பதிவை பகிர்ந்திருக்கும் சின்மயி, “எப்ஸ்டீன் ஆவணங்களில் தீபக் சோப்ரா. இன்னும் எத்தனை சக்திவாய்ந்த இந்தியர்களின் பெயர்கள் வெளிவரப் போகின்றன என்று நான் வியக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு பதிவில், ”ஆயிரம் உயிருள்ள பெண்களை நம்புவதற்கு, மக்களுக்கு ஒரு இறந்த மனிதனின் கோப்புகள் தேவைப்படுகின்றன என்பதே, அவர்கள் யாருடைய குரல்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள், யாருடைய குரல்களுக்குக் கொடுப்பதில்லை என்பதைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.

