"அரசியல் எல்லாம் பேசவில்லை; எதார்த்தத்தை பேசுகிறேன்" ஜெயலலிதாவைப் பாராட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின்!
ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், இந்நிகழ்ச்சியில் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இசை மேதை பி.சுசீலா உள்ளிட்ட இருவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஜெயலலிதாவைப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்தப் பலகலைக்கு மட்டுமே உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியில் செயல்படுகிறது இந்தப் பல்கலைக்கழகம். அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தைப் பேசுகிறேன்.
இப்படி, முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்; வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்து போய்விடும் என நினைத்து 2013ஆம் ஆண்டே, இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல்வர்தான் என அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார். இதற்காக, அவரை நாம் மனதார பாராட்டலாம்” எனப் பேசினார்.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக ஜெயலலிதா
2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அந்தப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். 2013இல் தொடங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர், ’தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.