‘தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!’ - காமராஜர் பற்றிய விவாதங்கள்.. முதல்வர் எச்சரிக்கை!
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, “காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால், தங்கும் இடங்களில் எல்லாம் குளிர்சாதன வசதி செய்துதர கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார், உயிர்போகும் முன்பு கருணாநிதியின் கையைப்பிடித்துக்கொண்டு, நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கேட்டுக்கொண்டார்” எனப் பேசியிருந்தார்.
இந்தக் கருத்துகளுக்கு எதிரான கண்டனக்குரல்கள் தமிழக காங்கிரஸின் பல மட்டங்களில் இருந்தும் வந்தது. செல்வப்பெருந்தகை, திருச்சி வேலுச்சாமி , மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலர் சிவாவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்கள். ‘திமுகவின் கட்டுக்கதைகளால்தான் காமராஜர் வீழ்ந்தார்’ என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்னும் கடுமையாகவே தன் எதிர்ப்பை பதிவு செய்தார். “ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்” என்றும் பதிவு செய்திருந்தார்.
'வைரவா அந்த விளக்கை அணை' என்று உதவியாளரிடம் கூறிவிட்டு படுக்கச் சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது என்கிற வரியும் நேற்று முழுக்க சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டன. இன்னும் சிலரோ, 1980களில் தானே ஏசியே வந்தது. அதற்கு முன்பு ஏது ஏசி என வரலாற்று ஆவணங்களை எல்லாம் கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
இத்தகைய சூழலில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.