கோவை| காதல் திருமணம் செய்த தம்பியை அவரது மனைவியுடன் சேர்த்து கொலை செய்த அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு
செய்தியாளர் : ஐஸ்வர்யா
கோவையில் மாற்று சமூக பெண்ணை காதலித்த தம்பியை கொலை செய்த அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
மேலும் இந்த ஆணவப்படுகொலை வழக்கில் மரண தண்டணை விதிக்கும் அளவிற்கு குற்றம் புரிந்து இருப்பது குறித்து இரு தரப்பு வாதம் வரும் 29ம் தேதி நடைபெறும் எனவும் கோவை SC & ST சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலை கனகராஜின் வீட்டார் ஏற்று கொள்ளாத நிலையில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் தனியாக அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.
இதனையடுத்து கனகராஜின் சகோதரர் வினோத்குமார் கனகராஜின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் வெட்டி கொலை செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் நகர காவல்துறையினர் எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கனகராஜ் சகோதரர் வினோத்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு..
பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பினை வாசித்தார்.
அப்போது கூட்டுசதி என்ற பிரிவில் பதியப்பட்ட வழக்கினை ஆதாரப்பூர்வமாக நிருபிக்க வில்லை என்பதால், வினோத்குமார் உட்பட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் முதல் எதிரியான உயிரிழந்த கனகராஜின் சகோதரர் வினோத்குமார் மீதான திட்டமிட்டு கொலை செய்தது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைவது, தகாத வார்த்தைகளால் பேசுவது, எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், வினோத்குமாருக்கு மரண தண்டணை விதிக்கும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
வரும் 29-ம் தேதி அதிக பட்ச தண்டனை வழங்குவது குறித்து இருதரப்பு வாதங்கள் கேட்கப்படும் எனவும், அன்றைய தினம் குற்றவாளிக்கு தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
3 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும்..
நீதிபதி தீர்ப்புக்கு பிறகு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த இரட்டை படுகொலையை நேரில் பார்த்த உயிரிழந்த வர்ஷினி பிரியா தாயார் அமுதா புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் 16 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், 120 பி கூட்டு சதி பிரிவில் 4 பேரையும் விடுதலை செய்துள்ளது.
அதே வேளையில் முதல் எதிரியான வினோத்குமார் கனகராஜை திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார் எனவும், அதிகபட்ச தண்டணையாக மரணதண்டணை கொடுக்கும் அளவிற்கு குற்றம் புரிந்துள்ளார் என நீதிபதி தெரிவித்துள்ளார் என கூறினார். நீதிமன்ற தீர்ப்பு 29 ம் தேதி முழுமையாக வந்தவுடன் 3 பேரின் விடுதலை குறித்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வர்சினி பிரியாவின் தாயார் அமுதா, விக்னேஷ்க்கு வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு சரியானது எனவும், அதே வேளையில் 3 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் திட்டமிட்டே படுகொலையானது நடத்தப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.