மழை விட்டாலும் திரும்பாத இயல்புநிலை.. வெள்ளத்தின் பிடியில் வயல்வெளிகள்!
செய்தியாளர்கள் விவேக்ராஜ், விஜயகுமார், ராஜூகிருஷ்ணா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வளையப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தீவில் வசிப்பது போல் வசித்து வருகின்றனர். மழை விட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் குடியிருப்புகளை சுற்றி உள்ள வெள்ள நீரை வடிய வைக்க வழியின்றி மின் மோட்டார்கள் மூலம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பைப்புகளை கொண்டு சென்று வெளியேற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்ட நிலையில் வண்டிக்கோட்டம், வடபாதி குறிச்சி, நெம்மேலி முதல்சேத்தி, ஏத்தகுடி, தலைமங்கலம் பகுதிகளில் பலத்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கியது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரையாறு தூர் வாரப்படாததால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
இதனால் ஆறு அருகே இருந்தும் வயல்களில் தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களாக பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் தண்ணீர் வடியாததால் அழுகி சேதம் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்த நிலையில் தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ள நீர் வடிந்தது. கோவிலை சுத்தம் செய்யும் பணி தொடங்கிய நிலையில், கோயிலில் இருக்கும் சண்முக மூர்த்தி, முருகப்பெருமான் விக்ரகங்கள், மேலக்கோவில் கொண்டு செல்லப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட பின்னர் நித்திய பூஜையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.