விஜயகாந்த்
விஜயகாந்த்கோப்புப்படம்

🔴LIVE | RIP Vijayakanth | காலமானார் விஜயகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காலமானார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

விஜயகாந்த்
மூச்சுவிட சிரமம்.. உடல்நிலையில் பின்னடைவு... விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை!

வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக இன்று காலை 9 மணியளவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அவருக்கு வயது 71.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

“கடவுளுக்கு கருணையே இல்லையே”

விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதையும் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மரியாதை
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மரியாதைபுதிய தலைமுறை

முன்னதாக கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜய்காந்த் மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

“கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும்.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என்றுள்ளார்.

பிரதமர் இரங்கல்

“திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் அவர். அவரது நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதை நிரப்புவதென்பது இனி வரும் காலத்தில் கடினமாக இருக்கும். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி”

வைரமுத்து இரங்கல்

“திரையில் நல்லவர்

அரசியலில் வல்லவர்

சினிமாவிலும் அரசியலிலும்

‘டூப்’ அறியாதவர்

கலைவாழ்வு பொதுவாழ்வு

கொடை மூன்றிலும்

பாசாங்கு இல்லாதவர்

கலைஞர் ஜெயலலிதா என

இருபெரும் ஆளுமைகள்

அரசியல்செய்த காலத்திலேயே

அரசியலில் குதித்தவர்”

- என்று X வலைதளம் மூலம் விஜயகாந்த் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் நம்மிடையே தொலைபேசி வழியாக பேசிய வைரமுத்து, “அவருடைய மண்டபம் இடிபடக்கூடாது என்று கலைஞரோடு வாதிட்டவர்களில் நானும் ஒருவன். அதற்கான முயற்சிகளில் முனைந்தோம். கிட்டே வந்து அது நழுவிவிட்டது. அந்த உணர்வு அவர் நெஞ்செல்லாம் காலமெல்லாம் நன்றியால் நிறைந்திருந்தது” என்று கூறி நினைவுகூர்ந்தார் கவிஞர் வைரமுத்து.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்

விஜயகாந்த் மறைவையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் “கேப்டன் விஜயகாந்த் இனி இல்லை. இரங்கல்கள். பொன்னான மனதுக்கு சொந்தக்காரர் என்றே அவரை நான் அறிவேன். Captain Vijaykanth is no more. Condolences. Was known as ‘man with a golden heart.’

மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இரங்கல்

“அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”

- ஓபிஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல்

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல்

“எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுள்ளார் மநீம தலைவரும், விஜயகாந்த்தின் உற்ற நண்பரும் நடிகருமான கமல்ஹாசன்.

பிரேமலதா விஜயகாந்த்தின் கோரிக்கை!

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

நடிகர் ஆனந்த்ராஜ் இரங்கல்

நடிகர் தியாகு இரங்கல்

திருப்பூர் சுப்பிரமணியன் இரங்கல்

மூத்த திரைப்பட பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்தனர். அதனை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

“திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவனத் தலைவருமான திரு விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. தனது திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் திரு விஜயகாந்த் அவர்கள்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இதற்காக இந்திய அரசின் சிறந்த குடிமகனுக்கான விருதையும் பெற்றவர். தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், தனது ரசிகர்களால் கேப்டன் என்று பெருமையோடு அழைக்கப்படுவதையே பெரும் விருதாகக் கருதினார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய அவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் வெற்றிகரமான தலைவராக முத்திரை பதித்தவர். தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக வெளிப்படையாகச் சொல்லும் போக்கு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப் படுத்தியுள்ளது.

சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக அவர் சாதித்தவை உழைப்பை ஊன்றுகோலாகக் கொண்டவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரது இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுள்ளார்.

இயக்குநர் சேரன் இரங்கல்

“வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை.. வாழும் காலம் முழுதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள்... தீரா நோயிலிருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்... வணங்குகிறேன்..” என்று கூறி தன் மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சேரன்.

ஆளுநர் ரவி இரங்கல்

தமிழ்நாடு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.

சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!” என்றுள்ளார்

டி. ராஜேந்தர் இரங்கல்

நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், விஜயகாந்த்தின் மறைவுக்கு வெளியிட்டுள்ள தன் இரங்கல் செய்தியில், “திரைஉலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்க்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” - என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விஜயகாந்த்தின் மறைவையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

“தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என்றுள்ளார்.

சரத்குமார் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

“அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

விஜயகாந்த் மறைவு - சரத்குமார் இரங்கல்
விஜயகாந்த் மறைவு - சரத்குமார் இரங்கல்

அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” - என்றுள்ளார்.

சீமான் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “தம் நண்பர்கள் பலரின் திரைத்திரை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்றுள்ளார்.

பாரிவேந்தர் எம்.பி இரங்கல் 

“எனது நல்ல நண்பர். சிறந்த குணங்கள் கொண்ட பெரிய மனிதர். இப்போது அவர் இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றுள்ளார் பாரிவேந்தர் எம்.பி.

தேமுதிக அலுவலகத்தில் நாளை உடல் அடக்கம்

விஜயகாந்த்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை (29.12. 2023) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

“கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து”

விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அறிவித்துள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ( 29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்” என்று கூறியுள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்.அர்.பிரபு இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து தயாரிப்பாளர் எஸ்.அர்.பிரபு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரும் இழப்பு. ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயம் கொண்டவராக, தனது உறவுகளான திரைத் துறையினருக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்தவராக, நல்ல அரசியல்வாதியாக, குடும்ப தலைவனாக, அனைவருக்கும் சிறந்த நண்பராக என எல்லாவகையிலும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! ஓய்வெடுங்கள் ‘கேப்டன்’ “ என்றுள்ளார்

மத்திய சட்டத்துறை அமைச்சர் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், “தேமுதிக தலைவரும், மாண்புமிகு திரையுலகின் மூத்தவருமான விஜயகாந்த்தின் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 'கேப்டன்' என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், தனது திரை மற்றும் திரைக்கு வெளியில் முயற்சிகள் மூலம் மக்களிடையே தேசபக்தி உணர்வை விதைத்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

குவிந்த தொண்டர்கள்... கடும் போக்குவரத்து நெரிசல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை உள்ள சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு உடல் கொண்டுவரப்படும் நிலையில், வழிநெடுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று முழுவதும் விஜகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நெப்போலியன் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து நடிகர் நெப்போலியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!!

அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!! இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!

விஜயகாந்த்
சோறு போட்ட சொக்கத்தங்கம் விஜயகாந்த்.. அன்று முதல் இன்று வரை கேப்டனைப் பற்றி நெகிழும் திரையுலகம்!

அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!

விஜயகாந்த்
Remembering Vijayakanth | “மேக்கப் போட்டாலும் போடலனாலும் அவர் ஹீரோதான்!”

வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!” என்றுள்ளார்.

விஜயகாந்த்
"மனிதநேயமுள்ள மனிதரை இழந்துவிட்டோம்" - எஸ்.பி. முத்துராமன் உருக்கம்

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றுள்ளார்.

சிவகுமார் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர்.. ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்.

தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர்.

விஜயகாந்த்
”முதலமைச்சராக அமர்ந்திருக்கவேண்டியவர் உடல்நலம் சரியில்லாததால்..” - சிங்கம்புலி உருக்கம்

நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இரங்கல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மறைவையடுத்து அமைச்சர் பி.டி.ஆர் வெளியிட்டுள்ள பதிவில் “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - தொண்டர்களுக்கும் – இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!” என்றுள்ளார்

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு உடல் கொண்டுவரப்படும் நிலையில், வழிநெடுக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மேம்பாலத்தில் அதிகளவிலான வாகனங்கள் ஸ்தபித்துள்ளன.

தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு குவிந்துவரும் தொண்டர்கள்
தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு குவிந்துவரும் தொண்டர்கள்புதிய தலைமுறை

இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ட்ராஃபிக் போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிக அளவில் வாகனங்கள் செல்வதை சமாளிக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடி பாலத்தின் மேலும், திருவீதி அம்மன் சேவை வீதியிலும், சாந்தி காலனி 13வது பிரதான சாலையிலும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றுள்ளனர்.

தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்த விஜயகாந்த்தின் உடல்

காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விஜயகாந்த்தின் உடல், மதியம் 1.25 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு வந்தடைந்துள்ளது. தொண்டர்களின் பாசவெள்ளத்தில் மிதந்துவந்த விஜயகாந்த்தின் உடல், சுமார் 4 கி.மீ தூரத்தை கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு கடந்து வந்தது விஜயகாந்த்தின் உடல்.

மறைந்தார் விஜயகாந்த்
மறைந்தார் விஜயகாந்த்

வழிநெடுக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி, காண்போரை கண்கலங்க வைத்தது.

விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி 

தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த்தின் உடலுக்கு, தலைவர்களும் திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

விஜயகாந்த்தின் உடலைக் கண்டு கதறி அழுத குடும்பத்தினர்... கண்ணீர் கடலில் தமிழகம்!

கண்ணாடி பேழைக்குள் உறங்கும் கருப்பு நிலா...

இன்று காலை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பேழைக்குள் உள்ள அவரை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயம்பேட்டில் குவிந்துவருகின்றனர். இதனால் கோயம்பேடு மட்டுமல்லாமல், கோயம்பேடு செல்லும் வழியே ஸ்தம்பித்துள்ளது.

விஜயகாந்த் மறைவு - மனதை உருக்கும் காட்சிகள்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து, அவர் உடல் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மனதை உருக்கும்படியான பல காட்சிகள் நடந்துள்ளன. அவற்றை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல்

விஜயகாந்த் மறைவையடுத்து அவரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆடியோ வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதை இங்கே காணலாம்.

எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

இபிஎஸ் நேரில் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் சேவை செய்யக்கூடிய மக்களிடத்தில் மிகுந்த மரியாதை உடைய விஜயகாந்த் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

“மெரினா பீச்சுல பத்துக்கு பத்து இடம் கொடுக்க சொல்லுங்க போதும்”

“அரசியல் வாழ்விலும் டூப் போடாதவர்” - பாடலாசிரியர் வைரமுத்து

விஜயகாந்த் உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள் சில தலைகள் மறையட்டும் பிறகு வரலாம் என காத்திருப்பார்கள். ஆனால் தான் வாழ்ந்த காலத்தில் கலைஞர் உச்சத்தில் இருக்கிறார், ஜெயலலிதா உச்சத்தில் இருக்கிறார். இருவரும் உயிரோடு இருந்த காலத்தில் பொதுவாழ்க்கைக்கு வந்து வெற்றி பெற்ற தலைவராக விஜயகாந்தை பார்க்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் வரை அவர் எட்டியுள்ளார். சண்டைக்காட்டிகளில் டூப் போடாதவர் என நண்பர்கள் சொல்லியுள்ளார். அரசியல் வாழ்விலும் டூப் போடாதவர். அவர் பன்னெடுங்காலம் நினைவு கூறப்படுவார்” என தெரிவித்தார்.

விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும் - அண்ணாமலை

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நாளை மக்கள் இங்கு அதிகம் கூடுவார்கள். ஏற்பாடுகள் முறையாக இல்லையென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும். தேசிய தலைவர்களும் அஞ்சலி செலுத்த வர உள்ளனர். எனவே ராஜாஜி அரங்கை இந்த அரசு வழங்க வேண்டும். அவரது உடலை அடக்கம் செய்ய அரசு இடம் வழங்க வேண்டும். அதில் ஒரு மணிமண்டபமும் கட்டித் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும் - கருணாஸ்

செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கருணாஸ், “மனித நேயத்தின் முழு உருவம் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான். ஒட்டுமொத்த சினிமா உலகிலும் அன்பையும் மரியாதையையும் போற்றக்கூடியவராக, அனைவரிடத்திலும் உரிமை எடுத்துக்கொள்ளக்கூடியவராக, ஒட்டுமொத்த மக்கள் மீதும் பேரன்பு கொண்ட மனிதரை நாம் இழந்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. பெரும் கூட்டம் வரக்கூடிய இந்நேரத்தில் தமிழக அரசு மிக நேர்த்தியாக கையாண்டு இருக்க வேண்டும். ஏன் வந்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.

நடிகர் சங்கத்துணைத் தலைவராக நான் மாநில அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை கேப்டன் உடலை ராஜாஜி அரங்கில் வைத்து பொதுமக்களை காண் வைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்தார்.

வைரலாகும் விஜயகாந்தின் பேச்சு

அபூர்வ கலைஞன் - சூர்யா

அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!

விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் வைக்கப்பட்டது விஜயகாந்த் உடல் 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com