போக்சோ நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து - பொய் புகார் அம்பலமானதால் உத்தரவு!
செய்தியாளர்: V.M.சுப்பையா
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு அளிக்கப்பட்ட ஒரு புகாரில், “எங்கள் மூத்த மகளை காதலிப்பதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபரொருவர், இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மேலும் அது தொடர்பான சில புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் என் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததார்” என பெற்றோர் தரப்பில் புகாரொன்று அளிக்கப்பட்டிருந்தது.
இதன்கீழ் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளைய பெருமாள் ஆஜராகி, “பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் மூத்த சகோதரியை, குமார் காதலித்து வந்தார். இந்நிலையில் அப்பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது. இந்த திருமணத்திற்கு குமார் இடையூறாக இருப்பார் என கருதி தங்கையை வைத்து பொய்யாக பெற்றோர் பாலியல் புகார் அளித்துள்ளனர். அரசு தரப்பில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, “விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் உடலில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் இல்லை என மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளது” என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் குமார் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. அதோடு, குமாருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அவர் செலுத்தி இருந்தால் அந்த தொகைகளை திரும்ப அவருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.