100* டி20 அரைசதங்கள்.. வரலாறு படைத்த கோலி! அசால்ட்டு செய்த பிலிப் சால்ட்! 9 விக்கெட்டில் RCB வெற்றி!
ஐந்து போட்டிகள் முடிவில் 3 வெற்றிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணியும், 2 வெற்றிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
173 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் களம்கண்டனர். முதல் 6 பவர்பிளே ஓவரில் விக்கெட்டை இழக்காமல் விளையாடினாலும் 45 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சஞ்சு சாம்சன், இந்த போட்டியிலும் மோசமாகவே பேட்டிங் செய்தார்.
19 பந்தில் 15 ரன்கள் என படுமோசமாக விளையாடிய சஞ்சு சாம்சன், க்ருணால் பாண்டியா பந்தில் அடிக்க முயன்று ஸ்டம்ப்அவுட் மூலம் வெளியேறினார். தொடர்ந்து ஆர்சிபி பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், கைக்கு வந்த ரியான் பராக்கின் கேட்ச்சை கோட்டைவிட்டார் யஷ் தயாள்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரியான் பராக் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி வெளியேறினார். மறுமுனையில் அபாரமாக விளையாடி தனியொரு ஆளாக போராடிய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசியாக வந்து 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட துருவ் ஜுரல் 35 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 173 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி.
9 விக்கெட்டில் ஆர்சிபி அசத்தல் வெற்றி!
174 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை டாமினேட் செய்தார். மறுமுனையில் விராட் கோலி அடித்துஆட முயற்சிக்காமல் ஸ்டிரைக்கை பிலிப் சால்ட்டுக்கு கொடுத்துவிட்டு சிக்சர் பவுண்டரிகள் பறப்பதை வேடிக்கை பார்த்தார்.
கைக்கு வந்த கேட்ச்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தவறவிட 6 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என வெளுத்துவாங்கிய பிலிப் சால்ட் அசால்ட்டு செய்தார். 28 பந்தில் அரைசதமடித்த அவர், 65 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட போட்டியை ஆர்சிபி அணியின் பக்கம் கொண்டுவந்த பிறகு வெளியேறினார்.
ஒரு விக்கெட்டை மட்டுமே ஆர்சிபி அணி இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலக்கிற்கு அருகாமையில் எடுத்துச்சென்ற பிறகு அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது.
4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய விராட் கோலி 45 பந்தில் 62 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த அரைசதத்தின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராகவும், டேவிட் வார்னருக்கு பிறகு இரண்டாவது சர்வதேச வீரராகவும் மாறி வரலாற்று சாதனை படைத்தார் கிங் கோலி.
மறுமுனையில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட படிக்கல், விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு ஆர்சிபி அணிக்காக 1000 ரன்கள் அடித்த 3வது இந்திய வீரராக அசத்தினார்.
இந்த அபாரமான வெற்றிக்குபிறகு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது ஆர்சிபி அணி.