2வது T20 | இறுதிவரை அனல்பறந்த ஆட்டம்.. தனியொரு ஆளாக வென்ற திலக் வர்மா! இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 132 ரன்னில் சுருட்டிய இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
தனியொரு ஆளாக போராடி வென்ற திலக் வர்மா..
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஜோஸ் பட்லரின் 45 ரன்கள், ஜேமி ஸ்மித் 22, கார்ஸ் 31 ரன்கள் உதவியால் 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
166 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்து பவுலர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தது. சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் சர்மா 12, சூர்யகுமார் 12, துருவ் ஜுரெல் 4, ஹர்திக் பாண்டியா 7 என அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நிற்காமல் வெளியேற, ஒருமுனையில் தனியாளாக நின்ற திலக் வர்மா வெற்றிக்காக போராடினார்.
என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும் 6வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வாசிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி போட்டியை இறுதிவரை எடுத்து சென்றனர். ஆனால் வாசிங்டன் 26, அக்சர் பட்டேல் 2 ரன்னில் அடுத்தடுத்து வெளியேற பொறுப்பு திலக் வர்மா ஒருவரின் தோளில் சேர்ந்தது.
ஆனால் இறுதிவரை அவுட்டாகாமல் 55 பந்தில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என விளாசிய திலக் வர்மா 72 ரன்கள் அடித்து இந்தியாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தாலும் சில தவறுகளால் வெற்றியை நழுவவிட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.