ரோகித், கோலி ஓய்வு அறிவிப்பு.. பின்னணியில் மிகப்பெரிய அரசியல்.. சுட்டிக்காட்டிய முன்னாள் பவுலர்!
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். ஆனாலும் 2027 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் இந்த ஜோடி, இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால் இவர்கள் இருவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதிலும் ரோகித் இன்னும் ஒருநாள் அணியின் கேப்டனாகவே இருக்கிறார். அதேநேரத்தில் விராட் எப்போதும்போல் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார். இந்த நிலையில், தற்போது அவர்களுடைய ஒருநாள் போட்டி குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், வி.கே.லால்வானி ஷோவில் பேசியுள்ளார். “விராட் கோலி மேலும் இரண்டு ஆண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாம். பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடைகூட அளிக்கப்படவில்லை. விராட் கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரைக் கட்டாயப்படுத்தி ஓய்வபெறச் செய்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓய்வு பெற்றபோது பிசிசிஐ அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்கவில்லை. பிசிசிஐக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்குச் சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும்.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்குப் பலியாகிவிட்டனர். பிசிசிஐக்குள் நடைபெறும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம். ரோகித் சர்மாவும் முன்கூட்டியே ஓய்வபெற்றார். அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் தானாக வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினார்கள். ஆனால், தேர்வுக் குழுவுக்கும், பிசிசிஐக்கும் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியல்” என அவர் தெரிவித்துள்ளார்.