FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ்.. சாம்பியனான முதல் இந்தியப் பெண்.. யார் இந்த திவ்யா தேஷ்முக்?
ஜார்ஜியாவில் நடைபெற்ற FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக்கும் கோனேரு ஹம்பியும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தனர். மகளிா் உலகக் கோப்பை செஸ் வரலாற்றில், இந்த முறை இரு இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் 38 வயதான கோனேரு ஹம்பியை 19 வயதான திவ்யா தேஷ்முக் வீழ்த்தி, சாம்பியனாகி உள்ளார். ஜார்ஜியாவின் படுமியில், இன்று இரண்டாவது ரேபிட் டை-பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. இதில் திவ்யா கருப்பு காய்களைப் பயன்படுத்தி ஹம்பியை வீழ்த்தி கிரீடத்தை வென்றார். இதற்கு முன்பு நடைபெற்ற கிளாசிக்கல் சதுரங்க போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, டை-பிரேக்கர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டியிருந்தது. அதற்கான போட்டி இன்று தொடங்கியது.
இதில் கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் முதல் ரேபிட் டை-பிரேக்கரில் டிரா செய்தனர். பின்னர் இரண்டாவது போட்டியில் திவ்யா வெற்றி பெற்றார். 19 வயதான திவ்யா, FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், இந்த வெற்றியின் மூலம் 'கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தையும் வென்றுள்ளார். FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் திவ்யா தேஷ்முக் பெற்றார்.
யார் இந்த திவ்யா தேஷ்முக்?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக், மருத்துவர் பெற்றோர்களான ஜிதேந்திரா மற்றும் நம்ரதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். அவரது மூத்த சகோதரி பூப்பந்து விளையாட்டில் ஆடத் தொடங்கியதால் இவருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. ஆனால், அவர் தனது விளையாட்டின் மீதான காதலை சதுரங்கத்தில் செலுத்தத் தொடங்கினார். அதற்காக, சென்னையைச் சேர்ந்த ஜி.எம்.ஆர்.பி.ரமேஷிடம் அவர் பயிற்சி பெற்றார்.
5 வயதில் ஆரம்பித்த அவருடைய சதுரங்கப் பயணம், தொடர்ந்து அவரை முன்னேற வைத்தது. 2012ஆம் ஆண்டு 7 வயதுக்குட்பட்டோர் தேசிய சாம்பியன்ஷிப்பை அவர் வென்றதன் மூலம் தனது முதல் பட்டத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து U‑10 (டர்பன், 2014) மற்றும் U‑12 (பிரேசில், 2017) பிரிவுகளில் உலக இளைஞர் பட்டங்களை வென்றார். திவ்யா தேஷ்முக் தனது பெண் FIDE மாஸ்டர் பட்டத்தை விரைவாகவே பெற்றார். 2021ஆம் ஆண்டு அவர் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தைப் பெற்றார்.
மேலும் அந்த மதிப்பீட்டின்கீழ் விதர்பாவின் முதல் மற்றும் இந்தியாவின் 22வது இடத்தைப் பிடித்தார். 2023ஆம் ஆண்டு, திவ்யா தேஷ்முக் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தைப் பெற்றார். அடுத்து 2024 ஆம் ஆண்டு உலக ஜூனியர் பெண்கள் U‑20 சாம்பியன்ஷிப்பை உலகின் நம்பர் 1 ஆக வென்றார். புடாபெஸ்டில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் (2024) போட்டியில் இந்தியா அணி தங்கப் பதக்கம் வென்றதில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இதுவரை, தேஷ்முக் தனது மூன்று செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கங்களையும், பல ஆசிய மற்றும் உலக இளைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.