கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடங்கிய கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையேயான மோதல், 2023 ஐபிஎல் தொடரில் நவீன் உல் ஹக் விவகாரத்தில் உச்சத்திற்கு சென்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில், களத்தில் மோதிக்கொண்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டனர். அந்த நிகழ்விற்கு பிறகு இரண்டு பேருக்கும் 100% போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கவுதம் கம்பீர் மெண்டராக இருக்கும் கொல்கத்தா அணிக்கும், விராட் கோலியின் ஆர்சிபி அணிக்கும் இடையே போட்டி நடைபெறவிருந்த நிலையில், இரண்டு வீரர்களுக்கும் இடையேயான ரைவல்ரி குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் போட்டியின் போது களத்திற்கு வந்த கவுதம் கம்பீர், விராட் கோலியுடன் கைக்குலுக்கி அனைவருடைய எதிர்ப்பார்ப்புக்கும் எதிராக நடந்துகொண்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இன்று தொடங்கப்பட்ட போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மற்றவீரர்கள் யாரும் பெரிதாக அடிக்காத நிலையில், கடைசிவரை நிலைத்து நின்ற விராட் கோலி 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விரட்டி 59 பந்துகளில் 83 ரன்கள் அடித்து பொறுப்புடன் விளையாடினார். விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்துள்ளது ஆர்சிபி அணி.
விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீரின் சந்திப்பு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இரண்டு அணியின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இரண்டு அணிகளுக்குமே அதிகமாக இருந்தது.
இந்நிலையில் போட்டிக்கு இடையில் டைம் அவுட்டிற்கு களத்திற்கு வந்த கவுதம் கம்பீர், விராட் கோலியுடன் நன்றாக பேசி கைக்குலுக்கி சென்றார். பெரிய ரைவல்ரியை எதிர்ப்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர் இரண்டு வீரர்களும். இருவரும் கைக்குலுக்கி பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
183 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிவரும் கொல்கத்தா அணி, 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் வெற்றிக்கான பாதையில் விளையாடிவருகிறது.