இந்தியா - பாகிஸ்தான் ! ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' ?

இந்தியா - பாகிஸ்தான் ! ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' ?

இந்தியா - பாகிஸ்தான் ! ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' ?
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும் இரண்டாவது லீக் போட்டியும் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்று இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் இன்று ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது "பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட தமது வீரர்கள் துடிப்பாக உள்ளனர். இதனால், இந்திய அணியை வெல்ல இந்த மூன்று துறைகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.எனவே இந்திய அணியை சந்திக்க தயாராக உள்ளோம்” என்று பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் மிக நீண்ட தொடரில் பங்கேற்றதால் விராட் கோலிக்கு ஆசியக் கோப்பையில் ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பை போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் இந்த இரு அணியும், இதுவரை நடைபெற்ற ஆசியக் கோப்பைகளில் எப்படி விளையாடியுள்ளது, எந்த அணி அதிக வெற்றியை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 12 முறை ஆசியக் கோப்பை போட்டியில் சந்தித்துள்ளன. அதில் இந்தியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதில் ஒரு போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. ஆசியக் கோப்பையை இந்தியா 6 முறை வென்று சாம்பியனாகி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் 2 முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் விராட் கோலிதான் பெஸ்ட் மேட்ஸ்மேனாக இருந்து இருக்கிறார். ஆசியக் கோப்பைகளில் மொத்தமாக அவர் 459 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்களும் அடங்கும். பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ் 437 ரன்களை குவித்துள்ளார். பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமாரும், இஷாந்த் சர்மாவும் தலா 11 விக்கெட்டுகளை ஆசியக் கோப்பையில் கைப்பற்றியுள்ளனர்.

இப்போது நாளை ஆசியக் கோப்பை போட்டியில் 13 வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற. இதில் ஆறாவது வெற்றியை பெற்று இந்தியாவின் வெற்றியை சமன் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முழு மூச்சாக களமிறங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் தோல்வியுடன் திரும்பி இருக்கும் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் களமிறங்குகிறது. ஆனால், பலம்வாய்ந்த அணியாக இந்தியா கருதப்படுவதால் பாகிஸ்தானை நிச்சயம் இந்தியா ஏழாவது முறையாக வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com