மரணத்தின் விளிம்பில் இருந்து.. பேரழிவில் தப்பிய குழந்தை.. 16 வருடங்களுக்குப் பின் படைத்த சாதனை!
ஜனவரி 12, 2010 அன்று கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை (Haiti) மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவானது. பூமிக்குக் கீழே வெறும் 13 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் பாதிப்பு மிகவும் கொடூரமாக இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஹெய்ட்டி நாட்டில் இருந்த பெரும்பாலான கட்டடங்கள் சாய்ந்த நிலையில், இதில் சிக்கி 1 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டில் 2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அதிக பேரைப் பலிகொண்ட நிகழ்வாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இந்தப் பேரழிவின்போது 1 வயதான குழந்தை ஒன்று கட்டட இடிபாடுகளுக்கு இடையே தனது பெற்றோரை இழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை அர்ஜென்டினா தம்பதி ஒன்று தத்தெடுத்து வளர்த்து வந்தனர். கிஃகி ராமோஸ் (Kiki Ramos) என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை வளர்ந்ததும் அவரிடமிருந்த கால்பந்து திறனை அறிந்த அவரது வளர்ப்பு பெற்றோர் சிறுவயதிலேயே கால்பந்து கிளப்பில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து வெலெஸ் சார்ஸ்ஃபீல்ட் (Vélez Sarsfield) கிளப் அணியின் அகாடமியில் இணைந்த அவர், கடந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் தனது கிளப் இளையோர் அணிக்காக 12 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.
இடது பக்க விங்கில் அவரின் வேகம் மற்றும் திறமை தேசிய அணியின் பயிற்சியாளர்களை திரும்பி பார்க்கவைத்த நிலையில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான அர்ஜென்டினா அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று ஈக்வடார் அணிக்கு எதிரான போட்டியில் கிஃகி ராமோஸ் களமிறங்கிய நிலையில், இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு அர்ஜென்டினாவின் இளையோர் தேசிய அணியில் விளையாடும் முதல் கருப்பின வீரர் என்ற சாதனையையும் கிஃகி ராமோஸ் படைத்துள்ளார். பேரழிவின் விளிம்பில் இருந்து மீண்டு தேசிய அணிக்காக சாதனை படைத்து வரும் கிஃகி ராமோஸின் கதை பலருக்கும் ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது.

