பிரேசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. தேசிய அணியிலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர்!
பிரேசில் அணிக்காக மொத்தமாக 80 கோல்கள் அடித்து, கால்பந்து ஜாம்பவான் பெலேவின் (77 கோல்கள்) சாதனையை முறியடித்து ஆல்-டைம் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்த நெய்மர் ஜூனியர், கடைசியாக சமீபத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 16-ஆவது சுற்று போட்டியில் நார்வேக்கு எதிராக விளையாடியிருந்தார். எனினும், இந்தப் போட்டியில் பிரேசில் அணி தோல்வி கண்டது. காயத்துடன் உலகக் கோப்பைக்குத் திரும்பிய நெய்மர், பிரேசிலின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட்டார். இந்த நிலையில், நெய்மர் ஜூனியர், அந்நாட்டின் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியான காயங்கள் மற்றும் உடல் தகுதிச் சிக்கல்கள் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வு குறித்து அவர், “தேசிய அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டது. நான் வரலாறு படைத்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மஞ்சள் சட்டட்டிக்காக எப்போதும் எனது ரத்தத்தையும் உயிரையும் கொடுத்துப் போராடினேன். ஆனால் இப்போது இனி தொடர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான நெய்மர், அதே மைதானத்திலேயே தனது கடைசி உலகக்கோப்பைப் போட்டியையும் விளையாடி விடைபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் தேசிய அணிக்காக சுமார் 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
பிரேசில் அணிக்காக 2013-இல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் வென்று தந்துள்ளார். சர்வதேச அணிக்காக நெய்மர் விளையாடாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், கிளப் போட்டிகளில் அவரது வருகை நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

