CWG 2026 | 3ஆவது தங்கத்தைப் பெற்ற இந்தியா.. இன்னும் உறுதியாகும் 10 பதக்கங்கள்!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் திலீப் மஹாது காவிட் மற்றும் முகமது பாசில் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தனர். ஆடவர் 100 மீட்டர் T47 பிரிவில் திலீப் மகாது காவிட், ஒரு பரபரப்பான ஓட்டத்தை வெளிப்படுத்தி, 10.71 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்தார். மேலும், இந்தப் போட்டியில், தனது சிறந்த செயல்திறனையும் பதிவு செய்தார்.
அவருக்குப் பின்னால் வந்த சகவீரரான முகமது பாசில், 10.83 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதன்மூலம் இந்தியா, மேலும் ஒரு தங்கத்தையும் வெள்ளியையும் வென்று ஆதிக்கம் செலுத்தியது. இந்த வெற்றியானது 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தையும் பெற்று மறக்க முடியாத நாளாக அமைந்தது.
தவிர, ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் 8.09 மீட்டர் என்ற தனது சிறந்த முயற்சியைப் பதிவுசெய்து, முரளி ஸ்ரீசங்கர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். இத்துடன், இந்தியாவின் பதக்க வேட்டை நின்றுவிடவில்லை. இந்திய குத்துச்சண்டை அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த நிலையில், ஆறு வீரர்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்மூலம், இவ்விளையாட்டில் இந்தியாவின் உறுதிசெய்யப்பட்ட பதக்கங்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்ற குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையை இது மிஞ்சும். தற்போது வரை இந்தியா, 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.

