கோ கோ உலகக் கோப்பை 2025: பிரேசிலை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இந்தியா!
சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்படுகிறது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் புதுடெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
மொத்தமுள்ள 20 ஆண்கள் அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதி போட்டிகள், அரையிறுதி போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது ஜனவரி 19ம் தேதி நடக்கவிருக்கிறது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில், பூடான் முதலிய அணிகளுடனும், பெண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் ஈரான், மலேசியா, கொரியா குடியரசு முதலிய அணிகளுடனும் இடம்பெற்றுள்ளன.
கோ கோ உலகக்கோப்பையின் முதல் போட்டியானது தொடரை நடத்தும் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே முதல் நாளில் நடைபெற்றது. அதில் இந்தியா வென்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரேசிலை வீழ்த்தி தொடர் வெற்றியை பதிவுசெய்தது இந்தியா.
2வது வெற்றியை பதிவுசெய்த இந்தியா..
கோ கோ உலகக்கோப்பையின் முதல் பதிப்பின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இந்தியா 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில் அணியை எதிர்கொண்டு விளையாடியது இந்திய அணி. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 64-34 என்ற புள்ளிகணக்கில் பிரேசிலை வீழ்த்தி எளிமையான வெற்றியை பதிவுசெய்தது.
இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது போட்டியில் பெரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது இந்தியா.