FIFA உலகக் கோப்பை | அனுமதியளித்த ட்ரம்ப்.. ’நோ’ சொன்ன ஈரான்.. காரணம் என்ன?
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 48 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் ஈரான் அணி குரூப் - G பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. அந்த அணிக்கான 3 லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.
இந்த சூழலில், அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் 12 தினங்களுக்கு முன்பு ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடி கொடுக்கவிருப்பதாக ஈரான் கூறியிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது, ஈரானில் 1,255 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த சூழலில்தான், ஈரான் அமெரிக்காவில் நடைபெறும் கால்பாந்து உலகக் கோப்பையில் பங்கேற்குமா? அமெரிக்கா அதற்கு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இதைத் தொடர்ந்து, உலகக் கோப்பையில் போட்டியிட ஈரான், அமெரிக்காவிற்கு பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக FIFA தலைவர் கியானி இன்பான்டினோ இன்று தெரிவித்திருந்தார். இது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்ள ஈரான் கலந்து கொள்ளாது என ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது டோன்யமாலி தற்போது தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஈரான் அரசுத் தொலைகாட்சியில் பேசிய அவர், ”அமெரிக்கா எங்கள் தலைவரை கொன்றதைக் கருத்தில் கொண்டு, எங்களால் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்க முடியாது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 2 போர்களை நம்மீது திணித்து ஆயிரக்கணக்கான நம் மக்களை தியாகிகளாக்கியுள்ளனர். எனவே, நிச்சயாமக நாம் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் பங்கேற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

