துபாய் | விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்.. இந்தியர் உட்பட 4 பேர் காயம்!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாததன் காரணமாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த இருநாடுகளின் கூட்டுத் தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரின் படுகொலைக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம் என ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் கடுமையாக தாக்கி வந்தது. பதிலுக்கு, அமெரிக்க - இஸ்ரேல் படைகளும் ஈரானை குறிவைத்து தாக்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரி ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் பேசியிருந்தார். அதேசமயம், அந்நாடுகளில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில், மார்ச் 8-ஆம் தேதி ஈரானின் புதிய உச்சத் தலைவராக, கொல்லப்பட்ட அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. காரணம் அவர், 1980களில் நடந்த ஈரான்-ஈராக் போரில் நேரடியாகப் பங்கேற்று இருந்ததுடன், ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நீண்டகாலமாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளார் என்பதாகும். இதன்மூலம், போர் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, 12 நாட்களாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இன்று 2 ட்ரோன்கள் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 1 இந்தியர், 1 வங்கதேசத்தவர், 2 கானா நாட்டினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அமெரிக்க தளவாடங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த ஈரான் ராணுவம், தற்போது மக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஈரான் தாக்குதலில் மட்டும் கடந்த 11 நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, போர் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையம், படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், விமானப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கி வருவதாக துபாய் ஊடக அலுவலகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறது.
அதேசமயம், இப்போரின் காரணமாக உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, போர் நிறுத்தப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
