வெற்றியைக் கொண்டாடிய சஞ்சு சாம்சன்.. அரையிறுதியில் நீக்கம்?தடை விதிக்கும் ஐசிசி?
டி20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான வெற்றியின்போது தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த சஞ்சு சாம்சன் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இது, மார்ச் 5ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக, இந்திய அணி சூப்பரி 8 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்கிற வாழ்வா, சாவா நிலை இந்திய அணிக்கு இருந்தது. எனினும், இதர வீரர்கள் சொதப்பியபோதும், சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று தனது அதிரடியால் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அவர், அந்தப் போட்டியில் 50 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு, தனது ஹெல்மெட்டைக் கழற்றி தரையில் எறிந்தார். பின்னர், அவர் மண்டியிட்டு கடவுளை வணங்கி நன்றி தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இதனால் சாம்சன் அரையிறுதியில் விளையாட வாய்ப்பிருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சஞ்சு சாம்சன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.சி.சி பரிசீலிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஒருவேளை, சஞ்சு சாம்சன் ஹெல்மெட்டை எறிந்ததாகக் கருதப்பட்டால் ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஐசிசி நடத்தை விதிகளின்படி, வீரர்கள் மைதானத்தில் சரியான நடத்தையைப் பேண வேண்டும். பிரிவு 2.2இன் கீழ், வீரர்கள் கிரிக்கெட் உபகரணங்களை துஷ்பிரயேகம் செய்ததற்காக தண்டிக்கப்படலாம். இதில் கோபத்திலோ அல்லது உற்சாகத்திலோ ஹெல்மெட், மட்டை அல்லது ஸ்டம்புகள் போன்ற பொருட்களை வீசுவது அல்லது அடிப்பது அடங்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக தடை விதிக்கப்படுவதில்லை. ஐ.சி.சி நடத்தை விதிகளின்கீழ், இதுபோன்ற செயல்கள் பொதுவாக நிலை 1 குற்றமாகக் கருதப்படுகின்றன.
வீரர்கள் கோபம் அல்லது எதிர்ப்பைவிட கொண்டாட்டத்தில் உணர்ச்சிகளைக் காட்டும்போது போட்டி நடுவர்கள் பொதுவாக மிகவும் மென்மையாக இருப்பார்கள். குற்றம் நிலை 2க்கு மேம்படுத்தப்பட்டால் தடை ஏற்படலாம். ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் 4 குறைபாடு புள்ளிகளைக் குவித்தாலும் இது நிகழலாம். சமீபத்தில், டி20 உலகக் கோப்பை போட்டியில் அவுட் ஆன பிறகு ஸ்காட்டிஷ் கிரிக்கெட் வீரர் தனது ஹெல்மெட்டை வீசியதற்காக தண்டிக்கப்பட்டார். பிப்ரவரி 18 அன்று, ஜார்ஜ் முன்சிக்கு 1 தகுதி நீக்கப் புள்ளி வழங்கப்பட்டது.

