”அது ஒரு போராளியின் அடையாளம்..” முகமது சிராஜுக்கு புகழாரம் சூட்டிய வாசிம் அக்ரம்!
2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பல்வேறு வீரர்கள் ஒவ்வொரு டெஸ்ட்டின் கதாநாயகர்களாக ஜொலித்தார்கள். ஆனால் தொடர் முழுவதும் 25 நாட்கள் பந்துவீசிய ஒரே பவுலராக இருந்த முகமது சிராஜ், தொடரின் இறுதிநாளில் எல்லோருடைய மனதையும் வென்றெடுத்தார்.
’நம்பிக்கை’ என்ற ஒற்றை வார்த்தையை மூச்சாக பிடித்துக்கொண்டு 25வது நாளிலும் 136 கிமீ/மணி வேகத்தில் பந்துவீசிய சிராஜ், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை தனியாளாக மீட்டு எடுத்துவந்தார்.
எப்படியும் இங்கிலாந்துதான் வெல்லப்போகிறது என்ற நிலையே இருந்தபோது, கடைசி 40 நிமிடங்களில் ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் ஆச்சரியப்படுத்தினார் சிராஜ். தனி ஒருவனாக போராடிய சிராஜின் போராட்டம் 2-2 என தொடரை சமன்செய்ய இந்தியாவிற்கு வழிவகுத்து கொடுத்தது.
மனதில் வலிமையுடன் 186 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜை ஒரு போராளி என்று முத்திரை குத்தினார் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.
இனி சிராஜ் துணை பவுலர் இல்லை..
டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்டுக்கு அளித்த பேட்டியில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம், “சிராஜ் பசியும் ஆர்வமும் நிறைந்தவர் - அது ஒரு நம்பமுடியாத முயற்சி. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 186 ஓவர்கள் பந்து வீசி, இறுதி நாளிலும் முதல் நாளிலிருந்த அதே துடிப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்க சகிப்புத்தன்மையையும், மன வலிமையையும் காட்டுகிறது. அவர் இனி ஒரு துணை பந்து வீச்சாளர் மட்டுமல்ல. அவர் தாக்குதலை வழிநடத்துகிறார், அதை மனதார செய்கிறார். போட்டியில் ப்ரூக்கின் முக்கியமான கேட்ச்சை தவறவிட்டாலும் கூட, அவர் கவனத்தை இழக்கவில்லை. அதுதான் ஒரு போராளியின் அடையாளம். இப்படியான வீரர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் உயிருடன் இருக்கிறது” என்று பாராட்டினார்.
மேலும், “நான் வேலை செய்யாதபோது கிரிக்கெட் பார்ப்பது அரிது, ஆனால் 5வது போட்டியின் கடைசி நாளுக்காக நான் காத்திருந்தேன். 5வது நாளில் இந்தியா வெற்றிபெற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாகவே நினைத்தேன். அவர்களுக்கு முதல் திருப்புமுனை தேவைப்பட்டது. சிராஜ் அதை சாத்தியமாக்கினார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.