0.5 சதவீதமாக குறைந்த வேகம்.. எச்சரித்த மருத்துவக்குழு.. பும்ராவிற்கு 5வது டெஸ்ட்டில் ஓய்வு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடிவருகிறது.
முதல் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் இந்தியா களம்காண உள்ளது.
கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் நடக்கவிருக்கும் நிலையில், பும்ரா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப்..
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, 2024-2025 பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல்முறையாக பங்கேற்றுள்ளார்.
முதல் மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.
பின்னர் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 31 ஓவர்கள் வீசி, 103 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களை விட்டுகொடுத்தார் பும்ரா.
இந்த ஸ்பெல் அவருடைய மோசமான ரெக்கார்டாக இருந்ததோடு மட்டுமில்லாமல், அவருடைய வேகத்தை படிப்படியாக குறைத்தது. இந்தத் தொடரில் அவர் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது, ஹெடிங்லியில் 42.7 சதவீதத்திலிருந்து லார்ட்ஸில் 22.3 சதவீதமாகவும், மான்செஸ்டரில் 0.5 சதவீதமாகவும் குறைந்தது.
இந்த சூழலில் அவருடைய உடற்தகுதி குறித்து மருத்துவ குழு எச்சரித்திருக்கும் நிலையில், மேலும் ஒரு காயம் ஏற்பட கூடாது என்பதற்காக 5வது டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படவிருப்பதாக கிறிக்இன்ஃபோ அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது. அவருக்கு பதிலாக 4வது போட்டியில் ஓய்வில் இருந்த ஆகாஷ் தீப், பும்ராவிற்கு பதிலாக 5வது டெஸ்ட்டில் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் 4வது டெஸ்ட் முடிந்தபிறகு பேசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பும்ரா உட்பட அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், இன்னும் அணியின் காம்பினேஷன் குறித்து முடிவெடுக்கவில்லை என்றும், பும்ரா இல்லையென்றாலும் மாற்றாக விளையாடும் வீரர் இந்தியாவிற்காக சிறந்ததை செய்வார் என்றும் தெரிவித்திருந்தார்.