15 ஆண்டில் முதல்முறை.. மும்பையின் வான்கடே கோட்டையில் கொடியேற்றிய ஆர்சிபி! அசத்தல் சாதனை!
2026 ஐபிஎல் தொடரில் மும்பையின் வான்கடே கோட்டையை ஆர்சிபி முறியடித்துள்ளது. ஃபிலிப் சால்ட், ரஜத் பட்டிதாரின் வெடித்துச் சிதறிய பேட்டிங்கால் 240 ரன்கள் குவித்த ஆர்சிபி, மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல கடந்தமுறை இறுதிப்போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸும் இந்தமுறை கோப்பையை தட்டித்துக்கும் முயற்சியிலும், இன்னொரு பக்கம் சூர்யவன்ஷியின் இளம் புயலோடு ராஜஸ்தானும் அதிரடி காட்டிவருகின்றன.
ஆனால் 5 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளும் 4 போட்டிகளில் 3 தோல்விகளை கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது மற்றும் 9வது இடத்தில் நீடிக்கின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஃபிலிப் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதாரின் வெடித்து சிதறிய பேட்டிங்கால் 240 ரன்களை மலைபோல் குவித்தது ஆர்சிபி அணி. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் மும்பை வான்கடே மைதானம் மும்பையின் கோட்டை என்ற கூற்று தகர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 15 வருடங்களில் முதல்முறையாக ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டுமுறை மும்பை வான்கடேவில் வைத்து மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அசத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கடந்த 5 போட்டிகளிலும் விக்கெட்டே இல்லாமல் செல்வது அவர்களுடைய பந்துவீச்சை பலவீனமாக்கியுள்ளது.

