T20 WC | இந்தியாவுக்கு எதிரான போட்டி.. பின்வாங்கும் பாகிஸ்தான்? உள்ளே நுழைந்த இலங்கை!
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பு செய்த நிலையில், அதில் விளையாடும்படி இலங்கை கோரிக்கை வைத்துள்ளது. இலங்கையின் கோரிக்கைக்குப் பிறகு, 'இந்திய புறக்கணிப்பு' நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் இன்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியா அணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே, பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை, அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீபும் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். அதேநேரத்தில், இதுதொடர்பாக ஐசிசிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ கடிதங்களும் செல்லவில்லை என அது தெரிவித்திருந்தது. அப்படி, வரும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானை இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் போட்டிதான் ஐசிசி மற்றும் அதன் ஒளிபரப்பாளர்களுக்கு வணிகரீதியாக மிகவும் முக்கியமான போட்டியாகும். இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிபிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், ’பரம எதிரிகளான இரு அணிகளுக்கும் இடையேயான பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி நடைபெறாவிட்டால், அது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவுடன் இணைந்து இந்தத் தொடரை நடத்தும் தீவு நாட்டில் போட்டியின் அமைப்பு மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்குப் பிறகு, 'இந்திய புறக்கணிப்பு' நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் மின்னஞ்சல் தொடர்பாக பதிலளித்துள்ள பாகிஸ்தான், ‘பாகிஸ்தான் அரசாங்க அளவிலும் கிரிக்கெட் மட்டத்திலும் இலங்கையுடன் எப்போதும் மிகவும் நெருக்கமான மற்றும் நட்புறவைக் கொண்டுள்ளது. எனவே, அவர்களின் வாரியத்திடம் இருந்து வந்த மின்னஞ்சலை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளது. மேலும், "பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தற்போது நாட்டில் இல்லை. அவர் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த மின்னஞ்சலை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வார், பின்னர் பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்" என்று பாகிஸ்தான் வட்டாரம் தெரிவித்துள்ளது.

