”இந்தியா ஃபைனலுக்கு போகாது” - ஆருடம் சொன்ன பாக். வீரரைச் சாடிய சித்து!
இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியிருப்பதால், பாக் வீரர் முகமது அமீரை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதிலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் நவ்ஜோத் சிங் சித்து அவரை போலி சாமியார் என்று வர்ணித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்தும், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி, மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, ”இந்திய அணி ஃபைனல்வரை செல்லாது; அதற்கு முன்பே நடையைக் கட்டிவிடும்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். மறுபுறம், அவரது அணியே சூப்பர் 8 சுற்றுடன் நடையைக் கட்டியது.
இந்த நிலையில், இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியிருப்பதால், முகமது அமீரை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதிலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் நவ்ஜோத் சிங் சித்து அவரை போலி சாமியார் என்று வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “"நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு போலிக் கணிப்புகள் சொல்லும் ஒரு பெரிய பழக்கம் உண்டு. அது உண்மையானால் சரி. இல்லையென்றால், அதைச் சாதாரணமாக ஒதுக்கி விடுவார்கள். அவர்கள் சில ஞானிகளைப் போலவே செயல்படுகிறார்கள். இவர்களைப் போன்றோர் வெறும் போலி பாபாக்கள். முதலில், இந்தியா தகுதி பெறாது, அரையிறுதிக்குக்கூட வராது என்றார்கள். ஆனால், சஞ்சு சாம்சன் மீண்டும் களமிறங்கியதும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டன. இங்கிலாந்து அரையிறுதியை வெல்லும் என்று சொன்னார்கள், இங்கிலாந்தும் வெளியேற்றப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து பேசிய முகமது அமீர், “நான் கிரிக்கெட் பற்றித்தான் பேசுகிறேன். இத்தொடரிலேயே இந்தியா மிகவும் சிறப்பாகவும், முழுமையாகவும் இந்த ஆட்டத்தில் விளையாடியது. பாராட்டப்பட வேண்டியதற்குப் பாராட்டு கொடுத்தே ஆக வேண்டும். நான் ஒரு நல்ல கணிப்பு செய்தேன், ஆனால் கேட்ச் விடுவது என் கைகளில் இல்லை. இந்தியா முழுமையான கிரிக்கெட்டை ஆடியது. ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரின் கேட்சை இங்கிலாந்து கைவிட்டதற்கு நான் பொறுப்பல்ல. இரண்டு அணிகளுக்கும் இடையே இருந்த முக்கிய வேறுபாடு ஃபீல்டிங்கும், ஜஸ்பிரித் பும்ராவின் அபாரமான பந்துவீச்சும்தான்" எனச் சமாளித்துள்ளார்.

