”வெற்றியை தோனிக்காக அர்ப்பணிக்கிறேன்..” LSG-ன் புதிய ஃபினிசர் முகுல் சௌத்ரி!
கேகேஆர் அணிக்கு எதிராக த்ரில் வெற்றியை பதிவு செய்த லக்னோவுக்கு, புதிய ஃபினிஷராக உருவெடுத்த முகுல் சௌத்ரி முக்கிய காரணமாக இருந்தார். 128/7 என்ற அழுத்தநிலையிலும் அவர் 7 சிக்சர்கள் பறக்கவிட்டு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையிலும் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் 128/7 என மோசமான நிலைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்றபிறகு, போட்டி மொக்கையாக இருக்கிறது என டிவி, மொபைலை ஆஃப் செய்துவிட்டு சென்ற ரசிகர்கள் ஒரு தரமான போட்டியை மிஸ்செய்திருப்பார்கள்.
ஸ்டார் வீரர்கள் அனைவரும் அவுட்டாகி வெளியேறிய பிறகும், அழுத்தத்தில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய 21 வயது முகுல் சௌத்ரி அதிசய ஃபினிஷிங்கை கொடுத்து எல்லோரையும் பிரம்மிப்பிற்குள் தள்ளினார்.
கேகேஆர் அணிக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், கடைசி 2 பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் பறக்கவிட்டு லக்னோ அணியை வெற்றிக்குக் கொண்டுவந்தார்.
வெற்றிக்கு பிறகு பேசிய அவர் தன்னுடைய இன்னிங்ஸை தோனிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான அதிரடி வெற்றிக்கு பிறகு பேசிய முகுல் சௌத்ரி, ”தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டும், அவர் அதை முடிக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அது சிக்ஸருக்கு அடிக்க ஒரு நல்ல பந்து, அதை உங்களால் அடிக்க முடிந்தால், பந்துவீச்சாளர் என்ன செய்வதென்று உண்மையிலேயே யோசிக்க வேண்டியிருக்கும். அதனால்தான் நான் அதைப் பயிற்சி செய்கிறேன்.
எம்.எஸ். தோனி எப்படி ஆட்டங்களை முடித்து வைப்பார் என்பதை நான் அதிகமாக பார்ப்பேன், நானும் அதே வரிசையில்தான் பேட் செய்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தார், நான் ஆட்டத்தை முடித்து அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று முகில் சௌத்ரி பேசியுள்ளார். அவருடைய இந்த பதில் சென்னை ரசிகர்களிடம் பாரட்டை பெற்றுள்ளது.

