“சஞ்சு சாம்சன் தான் எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தந்தார்..” - இயக்குநர் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது. புரமோஷன் இண்டர்வியூவில் அவர், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தான் தன் வாழ்க்கையில் நம்பிக்கை தந்தவர் என கூறுகிறார். வாய்ப்பு இல்லாதபோதும் தொடர்ந்து பயிற்சி செய்து, கிடைத்த ஒரே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உயர்ந்த சஞ்சுவின் பயணம், ‘ஒருநாள் நமக்கும் நேரம் வரும்’ என்ற நம்பிக்கையை தன்னுள் உருவாக்கியதாக பகிர்ந்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏப்ரல் 10ஆம் தேதியான நாளை வெளியாகவிருக்கிறது.
படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்றுவரும் நிலையில், இண்டர்வியூ ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சஞ்சு சாம்சனை தன்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்திய நபராக தெரிவித்துள்ளார்.
சாம்சன் தான் எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தந்தார்..
தன்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கை தந்தவர் சஞ்சு சாம்சன் தான் என்று கூறியிருக்கும் விக்னேஷ் சிவன், ”சஞ்சு சாம்சன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விளையாட்டே கதி என இருக்கிறார். முடிவில் அவருக்கான ஒரு மேட்ச் கிடைக்குது, அதில் வந்து அடிக்கிறார் அவருக்கான அனைத்துமாக மாறுகிறது. அதுபோல எல்லாருக்குமே ஒரு நாள் வாழ்க்கையில் வரும். அந்த நாளை நோக்கி காத்திருப்பது மட்டும் தான் நம்முடைய வேலை. அதுக்காக நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவர் அதற்கு தயாராக இருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும். அவருக்கு போட்டிக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதே அவருக்கு தெரியாதாம், ஆனாலும் அவர் தொடர்ந்து வலைப்பயிற்சி செய்துகொண்டே இருப்பாராம். என்ன மாதிரியான நம்பிக்கை பாருங்க அவருக்கு, வாய்ப்பு வருமா என்ற சமயத்தில் கிளவுஸை தூக்கி இஷான் கிஷன் கிட்ட கொடுக்கிறாங்க. அவருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும், அதுபோன்ற ஒரு நிலையிலிருந்து அவர் கம்பேக் கொடுக்கிறார். அப்போது வந்து அவர் அடிக்கும்போது எனக்கு புத்துணர்ச்சியாக இருந்தது.
அவரிடம் நான் ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்தபோதே பேசுவேன், மெசேஜ் செய்வேன். அவருடைய வெற்றியும், உலகக்கோப்பை பயணமும் எனக்கு என் வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்தது. சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வாங்கும்போது நமக்கும் இப்படி ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை கிடைக்குது. உனக்கான நேரம் வரும் வா எழுந்து ஓடு என்ற உணர்வு தோன்றியது” என பேசியுள்ளார்.

