அரையிறுதி| 3 சதம்.. ஒரு இரட்டை சதம்.. 800 ரன்கள் குவித்த கர்நாடகா!
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
காலிறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றிபெற்ற ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டின.
இந்நிலையில் ஒரு அரையிறுதிப்போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி அசத்திய ஜம்மு-காஷ்மீர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.
இந்தசூழலில் கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையே மற்றொரு அரையிறுதிப்போட்டி நடந்துவருகிறது.
800 ரன்கள் குவித்த கர்நாடகா..
லக்னோ மைதானத்தில் பரபரப்பாக நடந்துவரும் ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் தேவ்தத் படிக்கல் 232 ரன்கள், கேஎல் ராகுல் 141 ரன்கள், ஸ்மரன் ரவிச்சந்திரன் 135 ரன்கள் என அடிக்க முதல் இன்னிங்ஸில் 736 ரன்கள் குவித்தது கர்நாடகா அணி.
தொடர்ந்து விளையாடிய உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடகா தொடர்ந்து விளையாடிவருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மரன் ரவிச்சந்திரன் 127 ரன்கள் குவிக்க 299/6 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது கர்நாடகா. கேஎல் ராகுல் 70 ரன்களுடன் பேட்டிங் செய்துவருகிறார். 4ஆவது நாள் ஆட்டம் முடிவில் 802 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது கர்நாடகா அணி.
நாளை கடைசிநாள் ஆட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் கர்நாடகா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது உறுதியாகியுள்ளது.

