இந்தியாவுக்கே டஃப் தான்.. முல்லன்பூரில் இதுதான் முதல் சர்வதேசப் போட்டி! மைதானம் எப்படி இருக்கு..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுதான்.
செய்தியாளர் - சு.மாதவன்
2026 டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், 2024 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியாளர்களான தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிவருகின்றன.
உலகக்கோப்பைக்கு முன்னதாக இத்தொடரில் வெற்றிபெறுவது பலமாக அமையும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுக்க முயற்சித்துவருகின்றனர். முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடக்கவிருக்கிறது..
முல்லன்பூர் மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு..?
முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியில், டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்தாலும், அபிஷேக் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்று பேரிடமும் இருந்து சிறந்த ஆட்டம் வரவேண்டியுள்ளது. அதேபோல கடந்த போட்டியில் மெதுவாக ஆடிய திலக் வர்மா, இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஹர்த்திக் பாண்டியா , அக்ஷர் பட்டேல் இருவரும் கடந்த போட்டியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து பலமாக இருக்கின்றனர். அதையே இந்தப்போட்டியிலும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. அர்ஷ்திப் , பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி என இந்தியாவின் பவுலிங் வலுவாகவே இருக்கிறது. எனவே இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தென் ஆப்பிரிக்காக்கு நெருக்கடியை உண்டாக்க முடியும்.
தென்ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் அவர்களுடைய திறனுக்கு ஏற்ற ஆட்டத்தை மொத்தமாகவே வெளிப்படுத்தவில்லை. இந்தசூழலில் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்த போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குவார்கள். இன்ஃபார்மில் இருக்கும் மார்க்ரம், குயின்டன் டிகாக் இருவரும் கம்பேக் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிசிங் வீரரான டிரிஸ்டியன் ஸ்டப்ஸை மாற்றி களமிறக்கியது தென்னாப்பிரிக்காவிற்கு பிரச்னையாக மாறியுள்ளது. சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்டப்ஸ் சரியான இடத்தில் களமிறக்கப்பட்டால் அவருடைய அதிரடி ஆட்டத்தை இன்று எதிர்ப்பார்க்கலாம். டெவால்ட் பிரேவிஸ், மார்க்கோ யான்சன் மற்றும் லுங்கி நெகிடி கடந்த போட்டி போல இந்த போட்டியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினால் இந்தியாவை அவர்களால் வீழ்த்த முடியும்.
மைதானம் எப்படி இருக்கிறது..?
முல்லன்பூர் ஆடுகளத்தில் ஜபிஎல் போட்டிகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. ஆனால் ஆண்களுக்கான சர்வதேச போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை. முல்லன்பூர் ஆடுகளத்தில் கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. அதுவும் முதல் பாதியில் பேட்டிங்கிற்கும் இரண்டாம் பாதியில் பவுலிங்கிற்கும் ஆடுகளம் சாதகமாக இருந்துள்ளது.
இன்றைய போட்டியில் பிட்ச் பொருத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டில் எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத இடத்தில் தான் இருக்கிறது. இரவு நேரத்தில் போட்டி நடைபெறுவதால் பனிப்பொழிவு ஏற்படுமா? இல்லையா? என்ற குழப்பம் இருப்பதால் டாஸ் வெல்லும் அணிக்கு தான் தலைவலி இருக்கப்போகிறது.
கடைசியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இங்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில், முதல் போட்டியில் சேஸ்செய்த அணியும், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளது.
திறக்கப்படும் யுவராஜ் சிங் ஸ்டேண்ட்..
இன்றைய போட்டி தொடங்கும் போது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் மற்றும் உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் இருவருடைய பெயர்களில் மைதானத்தின் ஸ்டேண்ட்கள் திறந்து வைக்கப்பட உள்ளது.

