WT20 WC | இந்தமுறை 10% அதிகம்.. பரிசுத் தொகை விவரங்களை வெளியிட்ட ஐசிசி!
2009ஆம் ஆண்டு தொடங்கிய மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2024-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடர் நடந்த நிலையில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மொத்த பரிசுத் தொகையாக 7.96 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய்) ஒதுக்கியிருந்தது. தொடர்ந்து, உலகக் கோப்பையை வென்ற நியூசிலாந்திற்கு 2.34 மில்லியன் டாலர்களும், இரண்டாம் இடம்பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு 1.17 மில்லியன் டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.
இந்த சூழலில்தான், 12 அணிகள் பங்கேற்கும் 10-ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில், இந்தாண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், இத்தொடருக்கான பரிசுத் தொகை விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, 8.76 மில்லியன் டாலர்கள் மொத்தப் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் சுமார் 82 கோடியாகும். இதில், உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 19.5 கோடி ரூபாயும், இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு 9.7 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும். அரையிறுதியில் வெளியேறும் அணிகளுக்கு 6.3 கோடி ரூபாயும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் 12 அணிகளுக்கு நிச்சயத் தொகையாக 2.31 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தப் பரிசுத் தொகை கடந்த முறை வழங்கப்பட்டதைவிட 10% அதிகமாகும்.

