85% பார்வையை இழந்த இம்ரான் கான்? பாக். அரசுக்கு கடிதம் எழுதிய 14 கேப்டன்கள்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. இதைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு 'உடனடி மருத்துவச் சிகிச்சை' வழங்குமாறு சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவருடைய மரணம் பற்றிய வதந்தி செய்திகள் உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதனை, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது. இந்த நிலையில், இம்ரான் கானுக்கு 'உடனடி மருத்துவச் சிகிச்சை' வழங்குமாறு சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், 14 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் அவருக்கு முறையான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தி பாகிஸ்தான் அரசாங்கத்திடமும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடமும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் கிரெக் சேப்பல், பெலிண்டா கிளார்க், மைக்கேல் அதர்டன், நாசர் ஹுசைன், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இயன் சேப்பல் , ஆலன் பார்டர், மைக்கேல் பிரெர்லி, டேவிட் கோவர், கிம் ஹியூஸ், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வாக் மற்றும் ஜான் ரைட் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ‘இம்ரானின் உடல்நிலை குறித்த சமீபத்திய செய்திகள் - குறிப்பாக காவலில் இருந்தபோது அவரது பார்வையில் ஏற்பட்ட கவலைக்கிடமான சரிவு மற்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலைமைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. இம்ரான் கானுக்கு பின்வரும் தகுதிவாய்ந்த நிபுணர்களிடமிருந்து உடனடி, போதுமான மற்றும் தொடர்ச்சியான மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என அதில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் யாரும் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை. அதேநேரத்தில், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஷாஹித் அப்ரிடி உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இம்ரானுக்கு முறையான மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு சமூக ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி இருந்தனர்.
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்ததற்காக அவரது திறமை, மன உறுதி, தலைமைத்துவம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியன இன்றுவரை எல்லை தாண்டி போற்றப்படுகிறது. அதேநேரத்தில், கிரிக்கெட்டைத் தாண்டி, இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகவும் ஒரு சவாலான காலகட்டத்தில் தேசத்தை வழிநடத்தினார். 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளனர். இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டுகளின் விரிவடையும் பட்டியலையும் எதிர்கொள்கிறார். மேலும் டிசம்பர் 2025இல் சமீபத்திய தீர்ப்பிற்குப் பிறகு தற்போது 31 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. சமீபத்திய செய்திகளின்படி, இம்ரான் கான் தனது வலது கண்ணில் சுமார் 85 சதவீதம் பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

