”தோனியிடமிருந்து வீரர்களை கையால கற்றுக்கொள்ள வேண்டும்..” கில்லுக்கு கேரி கிர்ஸ்டன் அட்வைஸ்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. 3 போட்டிகளையும் வெல்ல வாய்ப்பு கிடைத்தும் அனுபவமின்மை மற்றும் தருணங்களை தங்களுடைய பக்கம் கொண்டுவர தவறிய இந்திய அணி மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒரு பேட்ஸ்மேனாக 3 சதங்கள் உட்பட 600 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் சுப்மன் கில், வீரர்களை கையாலுவதில் கோட்டைவிடுகிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய அணி வீரர்களை பாதுகாக்காமல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் மீது குற்றத்தை சுமத்தும் வகையில் பேசிய சுப்மன் கில்லை ரவிசாஸ்திரி விமர்சித்திருந்தார்.
இந்த சூழலில் அனைத்து திறனும் இருந்தாலும், உங்களால் மனிதர்களை கையால முடிந்தால்தான் முழுமையான தலைமைத்துவத்தை பெறமுடியும் என கேரி கிர்ஸ்டன் சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்..
சுப்மன் கில் தோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியிருக்கும் கேரி கிர்ஸ்டன், “இது சுப்மன் கில்லுக்கு ஆரம்ப நாட்கள். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் கேப்டன் பதவியில் நீங்கள் ஒன்றிணைக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
அவர் விளையாட்டில் ஒரு சிறந்த சிந்தனையாளராக இருக்கிறார், அவரால் கேப்டன் பதவியிலும் ரன்களை அடிக்க முடிகிறது. அவர் ஒரு நல்ல வீரர். ஆனால் தலைமைத்துவத்தில் நீங்கள் மனிதர்களை கையால தெரிந்திருந்தால் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என்று நான் நினைக்கிறேன்.
மனித மேலாண்மையில் தோனியை விட சிறந்து விளங்கியவரை நான் பார்த்ததில்லை. தோனியின் கேப்டன்ஸி நுணுக்கங்களை பின்பற்றினால், இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் சுப்மன் கில்லுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.