’One Last Time..’ தோனி பற்றி CSK வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி குறித்து இன்று வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வரும் நிலையில், அது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல், ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தொடர் தொடங்கும்போதும் சென்னை அணியின் கேப்டனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்படும். அது தற்போதும் எதிரொலிக்கிறது. 44 வயதை எட்டியிருக்கும் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், அவர் கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி, முதல்கட்டமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. ஏற்கெனவே அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, தோனியே மீண்டும் கேப்டனாக்கப்பட்டார். அப்போது, தோனி பற்றிய ஓய்வும் கூடுதலாகச் சேர்ந்து கொண்டது.
43 வயதான அவர் கடைசி பேட்டிங் வரிசையில் இறங்கியது வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது. எனினும் ஓய்வு குறித்த வதந்தி தொடர்பாக பேசிய தோனி, “இந்த ஐபிஎல் முடிந்த பிறகு, என் உடல் தகுதி தாங்குமா என்பதைப் பார்க்க இன்னும் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவு செய்ய எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த ஐபிஎல் (2026) சீசனிலும் தோனி விளையாடுவதை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று பல்வேறு மொழிகளில் போன் செய்து ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் One Last Time என்பதை மோர்ஸ் கோடு வடிவில் குறிப்பிட்டு சென்னை அணி பதில் அளித்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த சீசன்தான் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிஎஸ்கேவின் இந்தப் பதிவால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

