"தோனி அதை சொன்னபோது 'Wow' என நினைத்தேன்..!" - மறக்க முடியாத விசயத்தை பகிர்ந்த பிராவோ!
2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கம்பேக் ரசிகர்களுக்கு மறக்க முடியாதது. வயதான வீரர்கள் கொண்ட அணி என விமர்சிக்கப்பட்டாலும், தோனி தன்மீது நம்பிக்கை வைத்ததை பிராவோ நினைவுகூர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு 2018 ஐபிஎல் சீசன் என்பது எப்போதும் மறக்கமுடியாத ஒரு சீசனாகவே அமைந்தது. ஏனென்றால் முன்னாள் வீரர்கள் உட்பட, ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் சென்னை அணியின் வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது.
காரணம் அணியில் எடுக்கப்பட்டவர்கள் அனைவரும் முன்னாள் வீரர்களும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றவர்களுமாகவே இருந்தனர். அதிக வயது கொண்டவர்கள் இடம்பெற்றதால் 'டாடிஸ் ஆர்மி' என விமர்சிக்கப்பட்டது அப்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஆனால் இரண்டு ஆண்டு தடைகளுக்கு பிறகு தரமாக மீண்டுவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பை வென்று சம்பவம் செய்தது..
இந்தசூழலில் தான் 2018ஆம் ஆண்டு கம்பேக் சீசனாக இருந்த சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இருந்த ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ, தோனி அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் 2018ல் நடந்த சம்பவம் குறித்தும், தோனி குறித்தும் பேசியிருக்கும் பிராவோ, "2018-ல் நாங்கள் ஐபிஎல்-க்கு மீண்டும் கம்பேக் கொடுத்தபோது, அப்போது எனக்கு 34 வயது. ஒரு போட்டியில் நான் லாங்-ஆனில் ஒரு பந்தை பிடிக்க டைவ் செய்தேன். அப்போது அதை பார்த்த எம்.எஸ். என்னை உள்ளே அழைத்தார், ஓவர் முடிந்த பிறகு, அவர் என்னிடம் வந்து, 'இனி ஒருபோதும் என் தலைமையிலான அணியில் மைதானத்தில் டைவ் செய்யாதீர்கள்' என்று கூறினார்.
மேலும் 'நீங்கள் தடுக்கும் நான்கு ரன்களை விட உங்களுடைய 4 ஓவர்கள் தான் எனக்கு ரொம்ப முக்கியம்' என்று கூறினார். அவர் அதை என்னிடம் சொன்னபோது, நான், 'WOW' என்று நினைத்தேன்" என பேசியுள்ளார். தோனி மற்றும் பிராவோ இருவருக்கும் இடையே இருந்த பாண்டிங்கை மீண்டும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு கொல்கத்தா அணியிலிருந்து பயிற்சியாளர் ஆஃபர் வரும்போது முதலில் தோனியிடம் கூறிவிட்டு, அவர் ஒப்புக்கொண்ட பிறகு தான் நான் கேகேஆர் அணிக்கு சென்றேன் என கூறியிருந்தார் பிராவோ.

