’BCCI உடன் நட்பு வேண்டும்..’ இந்தியா உடனான உறவை மேம்படுத்த விரும்பும் வங்கதேசம்!
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என்றும், எங்களுடைய போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றவேண்டும் என்றும் வங்கதேசம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கையை கடைசி நேரத்தில் ஏற்கமுடியாது என ஐசிசி மறுத்த நிலையில், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிக்கொண்டது வங்கதேசம்.
ஒருபக்கம் வங்கதேசம் விளையாடவே நாங்கள் ஆசைப்பட்டோம் என பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவும், இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும் வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் புதியதாக அமைந்த அரசு இந்தியாவுடனான உறவை வலுவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்தியா உடனான உறவை விரும்பும் வங்கதேசம்..
சமீபத்தில் வங்கதேசத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமினுல் ஹக், இந்தியா உடனான தேவையற்ற விரிசலை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார். அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவர், பிரச்னையை சரிசெய்வது தான் அவருக்கான முதல் முன்னுரிமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் அவர், ”பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, நான் இந்திய துணை உயர் ஆணையரை நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தித்தேன். டி20 உலகக் கோப்பை பிரச்சினை குறித்து அவருடன் விவாதித்தேன். அவர் மிகவும் நட்பாக இருந்தார், மேலும் நான் அவருடன் நட்பு ரீதியாகவும் பேசினேன். அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவைப் பேண விரும்புவதால், இந்த பிரச்சினையை விவாதங்கள் மூலம் விரைவாக தீர்க்க விரும்புகிறோம் என்று நான் அவரிடம் சொன்னேன்.
சில சிக்கல்கள் காரணமாக, நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பிரச்சினைகள் முன்பே விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட்டிருந்தால், எங்கள் அணி பங்கேற்றிருக்கலாம்” என்று அமினுல் ஹக் கூறியதாக கிரிக்பஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

