சென்னையில்தான் போட்டியை நடத்துவோம்.. அடம்பிடிக்கும் BBL கமிட்டி! பச்சை கொடி காட்டிய BCCI?
ஐபிஎல் வெற்றியைத் தொடர்ந்து உலக லீக்குகளில் முக்கியமானதாக விளங்கும் ஆஸ்திரேலிய பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அணிகளின் விருப்பப்படி சென்னை சேப்பாக்கம் மைதானமே முதன்மையாக தேர்வாகியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்த நிலையில், பிசிசிஐயும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளும் அதே பாணியிலான லீக் தொடரை தொடங்கி நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட பிக் பேஸ் (Big Bash) லீக் தொடர் தற்போது ஐபிஎல் தொடருக்கு பின்னர் இரண்டாவது பெரிய கிரிக்கெட் தொடராக திகழ்ந்து வருகிறது.
இந்த தொடரை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பிரபலப்படுத்த அந்த அமைப்பு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் அந்த தொடரை பிரபலப்படுத்த பிக் பேஸ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டது.
இந்தியாவில் எங்கு போட்டியை நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்ட நிலையில், பிக் பேஸ் தொடரில் உள்ள அணிகளின் விருப்பமாக சென்னை சேப்பாக்கம் மைதானமே முதல் இடத்தில் இருந்துள்ளது. சென்னை ரசிகர்கள் சிறந்த அணிக்கும், அந்த அணி வீரர்களுக்கும் மரியாதை கொடுப்பார்கள் என்பதால் சென்னையில் போட்டியை நடத்த பிக் பேஸ் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த மைதானத்தின் உரிமையாளரான தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ ஒப்புதல் அளித்தால் போட்டியை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் பிக் பேஸ் நிர்வாகம் சார்பில் பிசிசிஐ-யிடம் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. முதலில் இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிக் பேஸ் தொடரின் தொடக்க போட்டியை நடத்த பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

